திங்கள், 19 டிசம்பர், 2016

ஈழத்தின் இலக்கியத் தேக்கம் - எதிர்வினை

ஈழத்தின் இலக்கியத் தேக்கம் கட்டுரையின் ஆரம்பம் மற்றும் முதலிலிருந்து வருகின்றேன். “படைப்பாக்கம் தான் இருப்பில் நிகழும் மாபெரும் புரட்சி ” இந்தக் கட்டுரையின் மையம் இதை நோக்கியதாக அமைந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். தவறெனில் திருத்தவும். சரி நான் இதை படிக்கும்போது புதிய சொல்லின் இதழ் ஒன்றின் ஆசிரியர் குறிப்புக்கள் அனைத்தும் கண் முன்னே தோன்றின. அதில் ஒன்றைக் குறிப்பிடுகின்றேன்.

படைப்பு- படைப்பு என்ற செயல் அல்லது தருணம் இல்லையென்றே நாங்கள் கருதுகின்றோம். இந்தச் சொல் பிரதிக்கு கூடிய சுமையையும் பிம்பத்தையும் கொடுக்கும்.
படைப்பாக்கம் என்பது படைப்புக்களைத்தானே உருவாக்கும்? அப்படியெனில் படைப்பு என்ற ஒன்று இருப்பதாக உணர முடியுமா? இல்லை படைப்பு என்ற ஒன்று இருப்பதாக உன்னரவில்லை எனில் படைப்பாக்கத்தின் மூலமான புரடசி சாத்தியா?
மற்றொன்று "வாசிக்கவும் எழுதவும் வருபவர்கள் இந்த கோடிக்கணக்கான கும்பல்களிலிருந்து அவற்றின் சிந்தனைகளிலிருந்து அறுபட்டு , வாழ்க்கையை வேறு விதமாக அணுகக் கூடியவர்கள். அவர்களையிட்டே இந்த உரையாடல் .அதை விட்டுவிட்டு அந்த கோடிக்கணக்கான மந்தைகளை மேய்ப்பதல்ல இதன் நோக்கம்" இந்தக் குறிப்பிடலில் எனக்கு உடன்பாடற்ற தன்மையே காணப்படுகின்றது. ஏனெனில் அந்தக் கோடிக்கணக்கான கும்பலில் ஆயிரக்கணக்கான கதை மாந்தர்கள் உள்ளனர்.

எழுத்தாளர்கள் அவர்களிடமிருந்தே கதைகளையும் காலங்களையும் எடுக்கின்றார். அவர்களின் காலத்திலிருந்துதான் தன் எழுத்தின் நுட்பத்தைப் புலப்படுத்துகின்றார். எனவே அந்த மனதைகளை மேய்ப்பதுவும் எழுத்தாளன் மற்றும் வாசகனின் பொறுப்பாகவே கருதுகின்றேன். குறைந்தபட்ஷம் கருத்துருவாக்குநர்களையாவது உருவாக்கும் செயல் அங்கு நிகழும்.

வாசிப்பில் நான் எழுத்தாளரை என் மனக்கண்முன்னே நிறுத்தி வைத்துக் கொண்டுதான் வாசிப்பேன். நன்றாக இருந்தால் மனத்தால் தழுவிக் கொள்வேன். எனக்கு திருப்தியைத் தரவில்லையென்றால் திட்டிக் கொள்வேன். ஏனென்றால் நான் ஒரு புத்தகத்தை படிக்கின்றேன் என்றால் அங்கு என்னுடைய நேரம் , பார்வைத் திறன், கிரகித்தல் திறன், புரிந்துகொள்ளும் தன்மை, விமர்சனத்தனமிலா, கருத்துவாக்கவியல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து அங்கு செலவழிக்கப்படுகின்றது.

ஆனால் உரையாடல் என்பதை பொறுத்த வரை மிக்க குறைவு என்றுதான் சொல்வேன். நான் பல்கலைக் கழகத்தில் 4 ஆம் ஆண்டில் படிக்கின்றேன். இந்த நான்கு வருடங்களில் இலக்கியம் பற்றி உரையாடுவதற்கான ஒரு தளமோ அல்லது இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களோ கிடைக்கவில்லை. இந்த ஆண்டில்தான் கபிலை நான் கண்டுபிடித்தேன். எப்போதாவது அவசரச் சந்திப்பில் இலக்கியம் பற்றியும் வாசிப்புப் பற்றியும் அவனுடன் கதைக்கும்போதும் நான் இவ்வாறே குறைபாட்டுக்கு கொண்டேன். பல்கலைக்கழகம் போன்ற அறிவார்ந்த தளத்திலிருந்து என்னால் இலக்கியம் பற்றிய உரையாடலை முன்னெடுக்க முடியவில்லை என்பதுவே எனக்கு பெரும் குறையாகவே உள்ளது.
போகட்டும்
ஈழ வரலாற்றில் இருக்கின்ற இடைவேளியைப் போன்ற இலக்கியத்திலும் ஒரு இடைவெளி என் வெற்றிடம் என்றே கூறும்படியான ஒரு நிலை இருப்பதாகவே தோன்றுகின்றது. நம்மிடம் இலக்கியச் சண்டைகள் அதிகரித்த அளவுக்கு இலக்கிய முயற்சிகள் நிகழவில்லை. வாசகனின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத நிலையில் வாசகன் அந்த இலக்கிய முயற்சியை வலிந்து தன மீது திணித்துக் கொண்ட நிலைமையே இங்கு காணப்படுகின்றது. ஆங்காங்கே நடைபெறுகின்ற புத்தக வெளியீடுகள் , விருதுகள் இவையனைத்தும் அதன் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.

எம்முடைய கடந்த தலைமுறையினர் இலக்கியம் பற்றிய சரியான புரிதலை எமக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை. அதன் வெளிப்பாடே இந்த உரையாடல்.
//தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கை பொறுத்தவரையில் பல்கலைக் கழகத்தின் செயல்பாடு பூச்சியம். அதனை அவ்வாறு நாம் எதிர்பார்க்காத தேவையில்லைத் தான். அதன் கும்பல் மன நிலைக்குள்ளிருந்து யதார்த்தனும் கௌதமியும் இயங்கும் பாட்டை தனிப்பட்ட ரீதியில் நானறிவேன். அறிவுத் துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமேயில்லை//

அறிவுத்துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இயங்கு நிலையில் இருக்கின்ற பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒரு கல்விச்சாலை மீது திணிப்பதில் உள்ள இடர்பாடுகளையும் சிந்திக்க வேண்டும் . நான் பல்கலைக் கழகத்தின் மீதான ஒட்டுமொத்த பிரியத்தையும் இழந்து விட்டேன். அங்கிருந்துகொண்டு குரல் எழுப்புவது என்பது வெற்றுக் கனவு என்பதையும் கண்டுகொண்டேன். அந்த இயந்திரத்தனமான ஆதிக்க மனநிலை மண்டிக்கிடக்கும் வெளியில் இலக்கியம் என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றுதான். புத்தகம் படிப்பவர்களை ஒரு காலத்தில் அறிவார்ந்தவர்களாகக் கருதிய கதைகள் பல நான் அறிவேன். உதாரணமாக ஏஜே வை குறிப்பிடுவேன். ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது தோழர்களே. அங்கிருந்துகொண்டு புத்தகம் படிப்பவர்கள் மொக்கைகள், மொன்னைகள் அல்லது சீன் பார்ட்டிகள். (இதிலும் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்) அய்யோ அதை பற்றிக் கதைக்க நினைத்தாலே என் மனமும் அறிவும் சோர்ந்து விடுகின்றது.

சரி இப்போதாவது இந்த உரையாடலைத் தொடங்கினோமே. வெளியில் இருக்கும் வாசகர்கள் என்பவர்களிற்கு இலக்கியம் என்பதை ஏதோ தொட முடியாத சிகரமாக காட்டுகின்ற செயலைத் தவிர்த்து விட்டாலே பொது. இங்கு ரமணிச்சந்திரன் வாசகர்களை எப்படி லியோ டால்ஸ்டாயையைப் படிக்க வைப்பது என்பது பற்றியும் வைரமுத்துவின் ரசிகர்களை மஃமூத் தர்வீஸை எப்படி படிக்க வைப்பது என்பது பற்றியும் சிந்திக்க தலைப்படுவோமாக.

(இந்தப் பதிவில், பதிலில், பகிர்வில் தவறேதும் இருப்பின் சுட்டிக்காட்டவும்)

//


//

1 - மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் தான் அது , கிரியேட்டிவிட்டி என்று ஓஷோ சொல்லும் விடயம் தமிழில் கொண்டு வரும் போது படைப்பு கொஞ்சம் நெருக்கமான மொழிபெயரப்பாக இருக்கும் என்று கருதினேன் . ஏனெனில் அவர் கூறும் அர்த்தத்தில் "புத்தாக்கம் " என்றும் மொழிபெயர்க்க முடியவில்லை . அதற்காகத் தான் ஆங்கிலத்திலும் மேலே அதனைக் குறிப்பிட்டிருந்தேன் . தவிர புதிய சொல்லின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு . அதே நேரம் அது ஒரு உரையாடலுக்கான தொடக்கப் புள்ளியும். இந்த உள்ளடக்கத்தில் நாம் அவதானிக்க வேண்டியது "கலையாக்கம் " தொடர்பான அவரது பார்வையை என்று தான் நான் கருதுகிறேன்

2 - மந்தை என்பது "கும்பல் மன நிலையை " குறித்தே நான் பயன்படுத்தியிருந்தேன். வாசிக்கதர்களெல்லாம் முட்டாள்கள் என்று நான் கூறவில்லை . ஆனால் ஏதோ ஒரு வகையில் மக்களிடம் இலக்கியம் சென்று சேர்க்கிறது , கதை , கவிதை என்று வாழ்க்கையின் ஒரு நாளில் எத்தனையோ கவிதை வரிகளை எளிமையாகக் கடந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த "மாஸ் மென்டாலிட்டியை " நாம் கடப்பதற்கு இலக்கியம் நமது காலத்தின் முக்கிய வடிவம் . மந்தை என்பது கீழானது என்ற அர்த்தத்தில் அல்ல . கும்பல் என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தியிருக்கிறேன் .

ஆகவே கும்பலில் இருப்பவர்களை நோக்கிப் பேசினாலும் எழுதுபவர்கள் அதிலிருந்து வெளியே நிற்பவர்கள் தான் , வாசிப்பவர்களுக்கு உண்மையில் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்களுக்கு வெளியே தான் அவர்களின் உலகம் இயங்கி கொண்டிருக்கும் . அது தான் இலக்கியம் என்று நான் நம்புகின்றேன் .

//அறிவுத்துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இயங்கு நிலையில் இருக்கின்ற பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஒரு கல்விச்சாலை மீது திணிப்பதில் உள்ள இடர்பாடுகளையும் சிந்திக்க வேண்டும் . நான் பல்கலைக் கழகத்தின் மீதான ஒட்டுமொத்த பிரியத்தையும் இழந்து விட்டேன். அங்கிருந்துகொண்டு குரல் எழுப்புவது என்பது வெற்றுக் கனவு என்பதையும் கண்டுகொண்டேன். அந்த இயந்திரத்தனமான ஆதிக்க மனநிலை மண்டிக்கிடக்கும் வெளியில் இலக்கியம் என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றுதான். புத்தகம் படிப்பவர்களை ஒரு காலத்தில் அறிவார்ந்தவர்களாகக் கருதிய கதைகள் பல நான் அறிவேன். உதாரணமாக ஏஜே வை குறிப்பிடுவேன். ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது தோழர்களே. அங்கிருந்துகொண்டு புத்தகம் படிப்பவர்கள் மொக்கைகள், மொன்னைகள் அல்லது சீன் பார்ட்டிகள். (இதிலும் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்) அய்யோ அதை பற்றிக் கதைக்க நினைத்தாலே என் மனமும் அறிவும் சோர்ந்து விடுகின்றது. //

இந்தப் பத்தியிலேயே கேள்வியும் பதிலும் உள்ளது . நீங்களே முன்னுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதென்று விட்டு பின்னுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள் . இது தான் எனது வாதமும் இப்பொழுது இருக்கும் நிலவரத்தை மாற்ற வேண்டும் என்பது தான் எனது குரல் . அதன் செயல்பாடு பூச்சியம் என்று நான் சொன்னால் , இல்லை அதை மாற்றி விட்டோம் என்று குரல் எழுவதையே விரும்புகிறேன் . நான் முயற்சி செய்தேன் தோற்று விட்டேன் என்பதையல்ல . பல்கலைக் கழகம் மீது தீர்க்கமான விமர்சனங்களை நீங்கள் வைக்க வேண்டும் . இலக்கியம் வாசிப்பவரை , எழுதுபவரைத் தவிர வேறெவருக்கும் அந்த guts இருக்காதென்பது எனது நம்பிக்கை . நீங்கள் வடிவாக அதை யோசித்துப் பார்க்கலாம் . இன்று பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் மீது மாற்றுக கருத்துக்களை அதில் படிக்கும் போதே வெளியிடுபவர்கள் யார் ? யதார்த்தன் , நீ , கபில் என்று மிகக் குறைந்தவர்களே எனது அவதானிப்பில் , வேறு யாரும் இருக்கவும் கூடும் . நீங்கள் எல்லாம் எங்கிருந்து இதற்கான வலிமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நான் இலக்கியம் என்று தான் சொல்வேன் .

Kirishanth-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக