வெள்ளி, 31 மார்ச், 2017

அறமும் கல்வியும் - வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்





வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. இவ்வளவு காலம் நான் பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றினால் குறிப்பிடும்படியான  மாற்றம் கூட ஏற்படவில்லை.

பல்வேறு காரணங்களின் தொடர்ச்சியும் நீட்சியுமாகவே இந்தப் போராட்டம் இன்றுவரை கவனிப்புக் குறைந்த போராட்டமாகவும் அழுத்தத்தை உருவாக்க மிகவும் கஷ்டப் படவேண்டியுமிருக்கிறது என்று கருதுகிறேன்.

நான் இதற்கு முன் வைத்த விமர்சனங்கள் யாவும் இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்களின் தவறல்ல, அவர்கள் பல்கலைக் கழகத்திலும் புறச் சூழலிலும் உருவாகியிருக்கும் தொடரான மாற்றங்களினால் உருவாக்கப் பட்டவர்களே என்ற புரிதலிலிருந்து இந்தப் போராட்டம் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.  

ஆயுத வழியில் இடம்பெற்ற விடுதலைப் போர் பல்வேறு சரி பிழைகளுடன் முடிவுக்கு வந்ததன் பின்னர் கடந்த ஏழரை வருடங்களில் இடம்பெற்ற சமூக மாற்றம் மிக அடிப்படையான சமூக ஒருங்கிணைவை குலைத்துள்ளது. பல்கலைக் கழக நிர்வாகத்தில் அரசியற் தேர்வுகள், மற்றும் மாணவர்கள் அரசியல் பேசக் கூடாதென்ற வாதம் பொதுப்புத்தியாக மாறியமை. கடந்த காலத்தில் பல்கலைக் கழகம் மிக மிக குறைத்த அளவிலேயே மாற்றுக் கருத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தமை போன்றன இப்பொழுதுள்ள பலவீனமான மாணவர் கூட்டத்தை வெளித்தள்ளியிருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

இதனால், மாணவர்கள் தமிழ்த்தேசியத்தை வெறும் கோஷமாகப் புரிந்து கொண்டு, மஞ்சள் சிவப்புக் கொடி கட்டி மாவீரர் தினத்துக்கு விளக்கு ஏற்றுவதும் தலைவன் பிரபாகரன் என்று சொல்வதோடு அவர்களது அரசியல் செல்பாடுகளையும் புரிதல்களையும் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் பல்கலைக் கழக மாணவர்களுக்கென்று இருந்த பெருமதிப்பை சரியச் செய்தது இந்த வகையான மேம்போக்கு அரசியலே. தமிழ்த்தேசியத்தைப் பற்றியோ  பெருந்தேசியவாதத்தை பற்றியோ இன்ன பிற தேசிய இனங்களின்  கோரிக்கைகள் பற்றியோ அல்லது குறைந்த பட்சம் தமிழ் மக்களிடம் உள்ள அரசியல் விருப்பங்களின் பன்மைத்துவம் பற்றியோ இவர்களில் பெரும்பாலனவர்கள் அக்கறை கொள்வதில்லை. பல்கலைக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான எந்தப் பெருவிவாதங்களையும் நடத்தியதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் போய் நின்று விட்டு அறிக்கைகளை வாசித்து விட்டு திரும்புவது தான் பெரும்பாலான பல்கலைக் கழக போராட்டம் என்கிற மரபை உருவாக்கி வருகிறார்கள் தற்போதைய மாணவர்கள்.

இன்னும் மோசமாக, தமது தவறான நடத்தைகளை நிர்வாகமோ அல்லது ஒழுக்காற்று சபையோ தண்டனை வழங்கினால் அதனை எதிர்த்து அற வழிப் போராட்டங்களை எடுத்து நடாத்துவது அதன் மூலம் தவறு செய்தவர்களை தப்பிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளில் கூட்டாக இயங்குவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் நாளைக்கு என்ன வகையான சமூகத்தை உருவாக்கப் போகிறோம். இதில் இன்னும் கவலையான விடயம் இதற்கெதிராக மாணவர்களின் தார்மீகமான அறம் எழுச்சி கொள்ளவில்லை என்பது தான். தமது தவறுகளை மறைக்க நிர்வாகத்தை குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு மோசமான முன்னுதாரணம். இவ்வளவு காலமும் தெரியாதா நிர்வாகம் இவ்வளவு குறைபாடுகளுடன் இயங்குகிறது என்று.



எவ்வளவு பிரச்சினைகள் வந்து போயின. எதற்காகவாவது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இடம்பெற்றதுண்டா? வெறும் சண்டித்தனம் ஒரு நாளும் மாணவர் இயல்பாயியிருக்காது. அதனை வைத்துக் கொண்டு மாணவர் சக்தியென்று பேரம் பேச முடியாது. செயல்வாதம் என்பது தொடர்ச்சியானது. அதற்கு மாணவர்கள் மத்தியில் அரசியல் பற்றிய புரிதல் உருவாக வேண்டும். அது வரைக்கும் சண்டியர்களின் பெயரிலும் வெற்று கோஷங்களை முன்வைத்து உரையாடுவார்கள் பெயரிலும் பலஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வியும் ஆன்மாவும்  ஒடுக்கப்படும்.



உண்மையில் இந்த விவாதங்களின் போதெல்லாம் நான் அவதானித்த ஒரு வார்த்தையை கண்டு அயர்ச்சி தான் மிஞ்சியது. அது, குறித்த குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை வகுப்பு செல்ல அனுமதிக்காதவிடத்து "மாணவர் புரட்சி" வெடிக்குமென்று. இவர்களை வைத்து ஒரு சீனா வெடி கூட வெடிக்க வைக்க முடியாது.

மாணவர் ஒன்றியம் தமக்கு கீழுள்ள வகுப்புகளை மந்தையாடுகள் போல பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் கூட முதல் வகுப்பு மாணவர்களை முன்வரிசையில் இருக்க வைத்து நிர்வாகத்தை எதிர்ப்பதாக பதாகைகளையும் கொடுத்திருந்தார்கள். இப்படியா அவர்களைப் பயன்படுத்துவது? இவர்களுக்கும் அடிமைகளுக்கும் என்ன வித்தியாசம் ?. அந்த முதல் வருட மாணவிகள் இருக்கும் படத்தைப் பார்த்தேன், பாவாடை சட்டை, இரட்டைப் பின்னல், முழிக்கும் விழிகள் என்று தேமே என்று இருந்தார்கள். இவர்களையெல்லாம் பயன்படுத்தும் போதும் இவர்களை இப்படியெல்லாம் அடக்கும் போதும் மூத்த மாணவர்களுக்கு உறுத்தவில்லையென்றால் நிர்வாகம் அடக்கும் போது திருப்பிக் கேள்வி கேட்க என்ன தகுதியிருக்கிறது?

இவ்வளவு விரிவாக இதனைப் பற்றி எழுதுவதற்கு காரணம், பெரும்பாலான பல்கலைக் கழக மாணவர்களுக்கு விளங்கி கொள்ளும் தன்மை மிகவும்  குறைவு, தங்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் தங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவுமே  இப்படியான வாதங்கள் வைக்கப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற தவறுகளை நிறுத்திக்கொள்ளாமல் நம்மால் கொஞ்சம் கூட, ஒரு சமூகமாக முன்னகர முடியாது.

மாணவர்கள் இந்த வெறும் கோஷங்களிடமிருந்து தப்பித்து தமக்கான அரசியல் புரிதலை ஏற்படுத்த வேண்டும், பொது வேலைத் திட்டங்களை அல்லது பொது நியாயங்களை முன்வைத்து நடக்கும் போராட்டங்களை ஆழமாக கற்க வேண்டும். அவற்றிலிருந்து தான் மாற்றம் நிகழும். பந்தலைப் போட்டுவிட்டு ஆயிரம் பேர் அதிலிருப்பதென்பதும், ஆயிரம் பட்டதாரிகள் இருப்பதென்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

- இரண்டு வருடங்களுக்கு முன் இதே போல இதே இடத்தில் நடந்த பட்டதாரிகள் போராட்ட நேரத்தில் சதீஷ் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைத்தார், அந்தக் கேள்வி வந்திருந்த அரசியல் பிரமுகர்களை முகம் சுளிக்க வைத்தது, அல்லது அது தொடர்பில் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

அதாவது பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக  "பொதுப்பொறிமுறை" ஒன்றை உருவாக்க ஏதாவது வேலைத் திட்டம் வடமாகாண சபையிடமோ அரசிடமோ இருக்கிறதா? அப்படியென்றால் அது என்ன ?

அதற்கு இன்றுவரை எந்த பதிலுமில்லை.

மேலும் பட்டதாரி மாணவர்கள் உரையாடும் போதும் சரி தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போதும் சரி இதனை ஒரு குறித்த பகுதிக்குரிய பிரச்சினையாக சுருக்கிக் கொள்கிறார்கள். அதாவது பல்கலைக் கழக மாணவர்கள், அரசாங்க வேலைக்ககாகத் தான் நாங்கள் கஷ்டப்பட்டுப் படித்தோம். அதனை மறுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அது அப்படியல்ல என்பதே எனது புரிதல். அரச உத்தியோகம் தான் புருஷ லட்க்ஷணம் பெண்ணுக்கு சீதனத்தை குறைக்கவும் மாப்பிளைக்கு அதைக் கூட்டவும் உதவும்.

நாங்கள் இந்த மக்களின் காசில் படித்தோம் இந்த மக்களிற்காக உழைப்பதற்குத் தான் நாங்கள் படித்தோம், அதனை நாங்கள் செய்யப் போகிறோம், திற கதவை. என்று அங்கிருந்த ஒருவரும் சொல்லி நான் கேட்கவில்லை. முழுக்க முழுக்க எங்களுக்கு வேலையில்லை நாங்கள் இன்னும் கல்யாணம் கட்டவில்லை  என்ற பல்லவி தான் சுற்றிச் சுற்றி வருகிறது.

படிக்கும் போதே இனிவரும் தலைமுறைகளாவது யாரின் காசில் படிக்கிறோம் யாருக்காகப் படிக்கிறோம் அரச உத்தியோகம் என்பது கதிரையில் குந்திப்பிடிச்ச்சுக் கொண்டிருப்பதல்ல என்பதை உணர வேண்டும்.

இதில் சில மாணவர்கள் அரசை மிரட்டிய விதத்தை பார்த்து நானே பயந்து போனேன். அதாவது " நாங்கள் வீட்டில இத்தின பேர் இருக்கிறம் எல்லாரும் ஓட்டுப் போடுறனாங்கள் வாற முறை போட மாட்டம்". இதெல்லாம் ஒரு பேரமா ? முதலில் பட்டதாரிகள் கெஞ்சுவதை நிறுத்த வேண்டும். தங்களின் பிரச்சினையை விளக்கி ஒழுங்குபடுத்தப் பட்ட முறையில் எந்தவிதமான எழுத்துக்களையும் நான் படிக்கவில்லை, எழுதிய பெரும்பாலானவர்கள் ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும். ஏன் இந்தப் பெரிய பட்டதாரி சமூகத்தால் தன் பிரச்சினைகளை தெளிவாக முன்வைக்க முடியவில்லை. அவர்களால் மக்களை பிரச்சினையை நோக்கி திரும்பச் செய்ய முடியவில்லை, ஏனென்றால்  அவர்களே இதனை ஒரு மக்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை, எதிர்காலத்தின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை, சமூகத்தின் கூட்டு மனத்தில் இந்த அரச உத்தியோகம் என்ற கருத்தியலும் அதனுடன் இணைந்த பிற விடயங்களும் என்ன பாதிப்பைச் செலுத்துகின்றன என்பது தொடர்பில் சிந்திக்கவில்லை. வேலை வேண்டும். அவ்வளவு தான்.

நமது சமூகத்தில் எத்தனையோ சுய முயற்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியினரே படித்த என்று சொல்லப்படுகிற மக்கள், மிகுதி எல்லோருமே சாதாரண மக்களே. அவர்களிடமிருக்கும் புத்துருவாக்கும் தன்மையை, அந்த இயல்பை இந்த மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அரச வேலை கேட்கக் கூடாதென்று சொல்லவில்லை. அதனை ஏன் கேட்க்கிறீர்கள் என்பது தொடர்பில் உங்களை நீங்களே கேள்வி கேட்டுப் பாருங்கள் என்று சொல்கிறேன். மகத்தான நியாயங்களுக்காக  மட்டுமே மக்கள் வீதிக்கு வருவார்கள். அப்படியொரு நியாயமான மாணவர் காலத்தையும் அப்படியொரு நீதியான சேவையையும் எதிர்காலத்தில் அரசின் இருக்கையிலிருந்து நீங்கள் கொடுத்தால் மட்டுமே மக்கள் உங்களை நம்புவார்கள்.

இப்பொழுது நிறைய நேரமிருக்கும், இவை தொடர்பில் சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றமென்பது பெரியது. அதனை செய்வதற்கான செயல்வாதமென்பது மிகப் பெரியது, நமது காலத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் கொஞ்சம் யோசியுங்கள், அதனை மக்களுக்குச் சொல்லுங்கள்.

அடிப்படையான மாற்றமே அரசியல் மாற்றம். அரசியல் மாற்றமே எங்கள் வாழ்க்கையை மாற்றும். அது வெறும் கட்சி மாற்றமல்ல, அது அரசியலுணர்வுள்ள ஒரு சமூக நிகழ்வு.  

ஏற்கனவே இடம்பெற்ற ஒரு பிரச்சினையான காலத்தில் எழுதிய கட்டுரையின் இணைப்பை தருகிறேன், அதில் " பல்கலைக் கழக மாணவர்கள் தமது பொறுப்புக்களை எப்பொழுது எடுக்கப் போகிறார்கள்? என்று எழுதியிருந்தேன். அந்த நம்பிக்கை தேய்ந்து மறைந்து கொண்டு வரும் இக்காலத்தில் சில விடயங்களை சிந்திக்கவாவது முடியுமா என்று இதனை எழுதுகிறேன்.

Link - http://kirisanthworks.blogspot.com/2016/10/blog-post_25.html

கிரிஷாந்த்    

கள்ளும் கடலும்



காலையில் எட்டுமணிக்கு வெளிக்கிடுவதாய் தான் கதை. எங்கட பெடியளைத் தெரியும் தானே. எட்டென்றால் அவங்களுக்கு காதில பத்தென்று தான் கேட்கும். அப்பிடியொரு விசித்திரக் காதுகள். ஆதி, ஸ்டான்லி, கபில் ஸ்டனிஸ்லெஸ், யதார்த்தன், அனோஜன் பாலகிருஷ்ணன், காண்டீ, விபிஷன், சன்சிகன், தமயந்தி சைமன் இவர்களுடன் நானும். நமக்கு வழிகாட்டிகளாகவும் தோழர்களாகவும் மேலும்  இரண்டு பேர்.

திரும்பும் போது 


ஒன்பது மணி, பஸ் ஸ்டான்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள் பாதிப் பேர், மீதி மக்கள் கொழும்புத்துறை ஜெட்டியடியில சந்திக்கிறதா' தான் ப்ளான். ஆனால் விண்ணனுகள் எல்லோருமாய்ச் சேர்ந்து 'கள்' வாங்குவதற்கு போத்தல் கொண்டு வர மறந்து போனோம். பிறகு போத்தலும் எடுத்து பீடிக் கட்டுகளையும் வாங்கிக் கொண்டு ஜெட்டியடிக்கு பஸ்ஸில போனோம். போற வழியெல்லாம் இலக்கியம் பஸ்ஸால பாய்ஞ்சு ஓடியிருக்குமெண்டது உங்களுக்கே தெரியும். எப்பொழுதையும் போலவே, நடு ரோட்டில் பாம்பு, குரங்கு போன்ற விலங்குகளை வைத்து ஷோ காட்டிக் கொண்டிருக்கும் போது பயத்துடன் மக்கள் அதை பார்ப்பதை போல  இப்பொழுதும் எங்கள் கூட்டத்தை மக்கள் பார்த்தபடி வந்தனர். இவங்கள் வேற மெல்லமாக் கதைக்கவே மாட்டாங்கள். கதைக்கிறது வேற அப்பிடி இப்பிடி கதை தான், சோ, மக்கள் பாடு அவ்வளவு தான்.

கொழும்புத்துறை ஜெட்டியடியில இறங்கி கள் வாங்க நாங்கள் கொஞ்சப் பேர் போனோம், அவங்கள் வேற பதினொருமணிக்குத் தான் திறப்பாங்கள் எண்டு சொல்ல, கடுப்பாகிப் போன நான், ப்ளாக்கில ஒரு போத்தல் கள்ளை இரண்டு மடக்கில் குடித்து விட்டு வெற்றிலையைப் போட்டு துப்பிக் கொண்டிருந்தேன், இலக்கியம் எழுதுபவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்து அவர்களை உருப்படியாக எழுத வைப்பது என்பது தொடர்பில் நானும் சன்சிகனும் ஆழ்ந்த விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அனோஜன் பாலகிருஷ்ணன் ஒரு கொடும் ராட்சதனைப் போல் என்னைப் பார்த்து மண்டையை ஆட்டியபடியிருந்தார். ஒருமாதிரித் தென்னங் கள் தான் கிடைச்சுது வாங்கினம். முதலில நான் குடிச்சது பனங் கள், அற்புதமான இனிப்புச் சுவையுடன் கூடியது.


 கள் வாங்கியாச்சு வெளிக்கிட வேண்டியது தானே என்று போட்டடிக்கு போனோம். பாணும் வாழைப்பழமும் வாங்கி வைத்திருந்தார்கள், பிடிச்ச மீனும் நண்டும் றாலும் போட்டுக்கை கிடந்தது, ஏறின உடனே கடலைவடையும் ரோல்சும் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டு தான் ஒரு மாதிரி பயணம் களை கட்டத்  தொடங்கியது. பாட்டுத் தான் பயணத்துக்கு சிறகு குடுக்கிற சாமான். பின்ன, போட்டுல தட்டி பழைய எம்ஜிஆர் பாட்டுக்களை அவிட்டு விடத்  தொடங்கினான் கபில், நாங்களும் சேர்ந்து கொண்டு மாறி மாறி பாட்டுகள் மிதக்க, போட்டும் பறந்துச்சுது. தமயந்தி சில டேஸ்டானா பாட்டுகளை எடுத்துக் குடுத்தார், அவர் அந்தக் காலத்தில பாடினதுகளா இருக்கும், உதாரணத்துக்கு " ஆத்தாடி பாவாடை காத்தாட ..." வகை பாட்டுக்கள்.

சங்கீதச் சக்கரவர்த்திகள் 


கபிலும் சன்சிகனும் எஞ்சின் பக்கத்தில இருந்து பாட, நானும் ஆதியும் காண்டியும் முன் பக்கத்தில நிண்டு பாடினம்.  தமயந்தி  நடுவில.

காண்டியை விடுங்கள் அவன் ஏதோ உச்சத்தில் கத்துகிறான், சன்சிகனின் எக்ஸ்ப்ரஷன் தான் என்னை திகிலூட்டுகிறது.


 இடையில ஒருக்கா இறங்கி ஏற்கனவே போட்டு வைச்ச வலையளில மீன் ஏதும் அம்பிட்டதா எண்டு பார்த்தம். சரி வரேல்ல. பின்ன கரை போய்ச் சேர்ந்து ஆளுக்கொரு சாமான் சக்கட்டையள தூக்கிக் கொண்டு நடந்தம்.

நிலக் கரையெல்லாம் கண்டல் தாவரங்கள் முளைச்சிருந்துச்சுது. நிலத்தில ஆரோ  கோடிக்கணக்கான ஓட்டைகளைப் போட்டது மாதிரி கரையின் உடல்  கிடந்துச்சுது. மெல்லப் போய் ஒரு பனைமரக் கூடலுக்குள்ள இடத்தைப் பிடிச்சம், கல்வேலி எண்டு ஏன் தான் பேர் வச்சாங்களோ தெரியேல்ல, பெரிய பெரிய மணல் குன்றுகள் தான் இருந்துச்சு, நிறயப் பனைகளும்.



சட்டியை வச்சு அடுப்பை ஒருத்தர் மூட்ட, கள்ளுப்போத்தலைத் திறந்து குடிக்கத் தொடங்கினோம், வந்தவர்களில் சிலர் சுத்தமான பெடியள் கள்ளு குடிக்க மாட்டாங்கள்,ஆனா அவை ஆரெண்டது சஸ்பென்ஸ் . கடைசிவரைக்கும்  சொல்ல மாட்டன்.

எங்கும் ஒரு சமையல்காரனாய் மாறி விடும் சன்சிகனுக்கு இன்டைக்கு மட்டுமென்ன ஹோலிடேயா, இறங்கினார் சமையல் சக்கரவர்த்தி, ஆனால் அவருக்கு கொடுத்ததோ பயற்றங்காய் நுள்ளுவது, மரவள்ளிக்கிழங்கு உரிக்கிறது போன்ற சில்லறை வேலைகள் தான், ஆதியும் இந்த நுள்ளுற விளையாட்டுகளில கெட்டிக்காரன் என்பதால் சேர்ந்து நுள்ளிக்கொண்டு நின்றான். கபிலும் ஸ்டான்லியும் சேர்ந்து உதவினார்கள். எங்கோ கிடந்த கொய்யாக்காய் பாக்கை கண்டு பிடித்த யதார்த்தன் அதனை எடுத்து கொறித்துக்  கொண்டு கீரையை ஆய்ந்து கொண்டிருந்தார். இந்த சீனில் அனோஜன் பாலகிருஷ்ணன் மற்றும் விபிஷன் மிஸ்ஸிங், அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, அப்ப தான் எனக்கு மெதுவாக கள் ஊறத் தொடங்கியது. காண்டி மகானும் என்னக்கு கள்ளு ஊற்றித் தந்து பீடியை மூட்டினார்.



தமயந்தியும் மற்றவரும் மீன் நண்டு றால் கணவாய் எல்லாம் கழுவியெடுத்துக் கொண்டு வந்து கொத்திக்கிற தண்ணிய முதல்ல பார்த்தினம் , பிறகு தண்ணியளவக் கொஞ்சம் கூட்டினா நல்லது எண்டு ஒருத்தர் சொல்ல எனக்கு என்ன விளங்கிச்சுதோ  தெரியேல்ல இன்னொரு கோப்பை கள்ளை வாய்க்குள் ஊற்றி தண்ணியளவைக் கூட்டிக் கொண்டேன்.



பிறகு மரக்கறிகளை கழுவியெடுத்து, ஒடியல் மாவை தண்ணியில ஊற வச்சு வேலைகளை தொடங்கினோம். எனக்கு இந்த வைபர் போன்ற அதிநவீன தொழில் நுட்பங்களிலெல்லாம் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, ஆனால் நண்பரொருவர் அறிமுகப்படுத்திய " ஜில் ஜுங்க் ஜக் " என்ற குரூப்பில் ஏதோ புதினமாய் இருக்கிறதென்று அண்மையில் வந்த "டங்காமாரி ஊதாரி" என்ற பாடலின் நடன வீடியோவை கண்டு களித்தோம்.



கூழ் ரெடியாகத் தொடங்க நாங்கள் கடலுக்கை போவமெண்டு வெளிக்கிட்டம். தமயந்தி அண்ணையும் விடாமல் படமெடுத்துக் கொண்டு நின்றார். எல்லாரும் கடலுக்கை இறங்கினோம், விபிஷன் மட்டும், சந்திரமுகியில் ஒரு கட்டம் வரும் கடைசியாய் சந்திரமுகியை விரட்ட வரும் சாமியார் , மாடியில இருந்து ரஜினிகாந்த் இறங்கி வரும் போது எதையோ சாதிச்ச ஒரு தேஜஸ்ஸை முகத்தில் கண்டதாகச் சொல்லுவார், அப்பிடி ஒரு தேஜஸுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.



கடல் அடியில கடும் சேறு, கால் புதையப்  புதைய நடந்தம், அவ்வளவு வழுக்கலா இருந்தது கடலினடி. குளிச்சிட்டு கரையேறி கூழ் குடிக்க நடந்தம், கொண்டு வந்த கோப்பைகளில றாலும் கணவாயும் சுழியோட நண்டு மிதக்க ஒரு உறைப்படிக்கிற செத்தல் மிளகாய் வாசத்தோட கூழ் ஊற்றினம். உறைக்க  உறைக்க கூழ் ருசியையும் இந்த வாழ்க்கையையும் மெச்சி மெச்சிக் கொண்டாடினோம். இரண்டு கோப்பை கூழ் குடித்து விட்டு சரி இன்னும் கொஞ்சம் இடமிருக்கென்று கள்ளை கொஞ்சம் குடித்தேன், பீடியைப் பற்ற வைத்து இழுத்தேன், மொத்த வாழ்க்கையும் ஒரு "பூ" வில் வெளிவந்த மாதிரி வாயில இருந்து பீடிப் புகை வெளியில போச்சுது.

தமயந்தி அண்ணை எடுத்த படம் 




அந்த நிலத்தின் காட்சியமைப்பு அற்புதமானது, முழுக்க விதம் விதமான தாவரங்கள்.  மணல் குன்றுகள் , கடலின் பாசிக் கரை, மணல் நிறத்தை என்ன சொல்லுறது , சரியாத் தென்னங்கள்ளின் நிறம் தான், கொஞ்ச நேரம் கரையில படுத்திருந்து பக்கத்தில கள்ளுப் போத்தலையும் வச்சிட்டுப் பார்த்தன், மணல் கள்ளின் நிறத்திலையும் கரையில வந்து ஒதுங்குகிற நுரை கள்ளு நுரை மாதிரியும் கிடந்துது, பூமியும் கடலும் தளும்பிற இடத்தில கள்ளுப் போத்தலை வைத்து விட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தேன், உறைச்ச வாய்க்கு கள்ளு அட்டகாசம்.



மறுபடியும் திரிந்து விட்டு நானும் காண்டியும் தமயந்தி அண்ணையோட போட்டில ஏறி கொஞ்சம் சுத்தினம். பிறகு வந்து தமயந்தி அண்ணையை கொஞ்சம் படம் எடுத்தேன் கடலில வச்சு, பின்ன கொண்டு வந்த கொஞ்ச மீனையும் றாலையும் நண்டையும் சுட்டு , பாணோடையும் தனியாவும் சாப்பிட்டம். முடிச்சுக் கொண்டு படகேறி, மீண்டும் பாட்டேறி , கரையேறினோம்.

- மிச்சக் கதைகளை மற்றவர்களும் சொல்ல விட்டு வைக்கிறேன்-

குறிப்பு - எப்பொழுதுமே பயணக் குறிப்பில்  உள்ள அலுப்பென்னவென்றால் நிறைய விடயங்கள் சென்சார் பண்ண வேண்டியிருக்கும் என்பது தான். நீங்கள் இப்பொழுது வாசித்தது கூட  வெறும் ஒரு உப்புத் துண்டு தான், அனுபவம் எப்பவும் கடல் .