வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஆசிரியர் தினம் - யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்




இரண்டு பாடசாலைகளை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒன்று 250 மாணவர்கள் படிக்கும் உள்ளூர் பாடசாலை, மற்றையது இரண்டாயிரம் பேர் படிக்கும் தேசிய பாடசாலை.

முதலாவது பாடசாலையின் ஆசிரியர் தினம் மற்றும் அதற்கு முந்தைய தினங்கள்

பெரிதாக முன்னாயத்தங்கள் எதுவுமில்லை. சில நிகழ்வுகள் , சில உரைகள் அநேகம் தலைமையுரை அதிபருரை சிறப்புவிருந்தினர் உரை,அவ்வளவு தான். சில பாடல்கள், முதல் நாள் வரைக்கும் என்ன பாடல் என்பது பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நூறு ரூபா சேர்ப்பதாக மாணவர்கள் முடிவெடுப்பார். நூறு பேர் காசு கொடுத்திருப்பர். மிச்ச பேரிடம் காசு வாங்கினால் அது கொடும் சுரண்டல் வகையை சாரும். குடும்பங்களை கொல்வதாக அமையும். ஒரு கோப்பை அல்லது சின்ன அன்பளிப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு நூறு ரூபா பெறுமதியான பரிசு, மாலை. அவ்வளவு தான் ஏற்பாடு.அவ்வளவு தான் முடியும்.

இந்த முறை முதல் நாள் புலமைப் பரிசில் முடிவுகள் வெளிவந்திருந்தன. சும்மா பேச்சுக்கு புள்ளிகளை கேட்டிருப்பார்கள், அவர்களுக்கு இது பற்றியெல்லாம் பெரிய அக்கறை இல்லை , வீட்டிலும் பாஸ் பண்ணினால் நல்லம் இல்லையெண்டால் பரவாயில்லை என்ற மனோபாவம்.

நிகழ்வு நாளன்று அரை குறையான பாடல்கள் , முன்னாயத்தங்கள் குறைவென்பதால் நிகழ்வுகள் சீரின்றி இருக்கும் . ஆனால் வழக்கம் போல எதைப் பற்றியும் கவலைப் படாமல் எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

வழக்கம் போல அந்த நாளும் பொன்னாளே என்று அடுத்த நாள் பள்ளிக் கூடம் வருவார்கள்.


தேசிய பாடசாலை -

எஞ்சினியரும் டொக்டரும் பெரிய பெரிய அதிகாரிகளின் பிள்ளைகளும் வியாபாரிகளின் பிள்ளைகளும் , கொஞ்சம் கீழ் நடுத்தர வர்க்க பிள்ளைகளும் கூடிக் கொண்டாடும் வைபவம் . சேருக்கு சேட் வாங்கி குடுக்கோணும் . மிஸ்ஸுக்கு கேக் வாங்கி குடுக்கோணும் அது இதெண்டு பெரிய லிஸ்ட் ஒன்று வீடுகளுக்கு சென்று பிள்ளைகள் கேட்பார்கள். அவன் அது வாங்கி குடுக்கப் போறானாம் நாங்கள் இது வாங்கி குடுக்கோணும் இது தான் பிள்ளைகளின் வாதம் .

இங்கே முன்னாயத்தங்கள் படு பயங்கரமாக நடக்கும் . ஆயிரம் ரூபாய் வரை அன்பளிப்பு வாங்கபப்டும் . குறைந்த தொகைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். மாணவரும் பெற்றோரும் போட்டி போட்டுக் கொண்டு ஆசிரியர்களை கவர்வார்கள். புலமைப் பரிசில் முடிவுகளும் வெளி வந்ததால் விசேடங்களும் அதிகரித்திருக்கும். இது ஒரு பெரும் கார்னிவல் கொண்டாட்டமாக கரை புரண்டு ஓடும்.

இரண்டு பள்ளிகளின் மாணவர்களும் ஒரே கல்வி முறையில்  படித்தாலும் வர்க்க வேறுபாடுகளும் , மேல்மட்ட சிந்தனைகளும் தெளிவாக துலங்க ஆரம்பிக்கின்றன. எதிர்காலத்தில் இந்த இரண்டு பள்ளிகளின் பிள்ளைகளும் என்னவாக இருப்பார்கள் , அவர்கள் என்னவாக இருந்தாலும் எப்படி இருப்பார்கள் என்று தெளிவான சித்திரங்களை நாம் இப்பொழுதே பெற்றுக் கொள்ளலாம். அன்பை வெளிப்படுத்துவதில் தடையேதுமில்லை. ஆனால் அவற்றை பண்டத்தின் பெறுமதியை வைத்துத் தான் தீர்மானிக்க வேண்டுமா ?

ஆசிரிய நண்பரொருவர் சொன்னார் " தம்பி , போன வருஷம் வாங்கின மணிக்கூடுகளே ஒரு தொகை கிடக்கு , இந்த வருஷம் இன்னும் கூட , அதை வறிய மாணவர்களுக்கு கொடுத்துவிடுவேன்" என்று . இப்படியிருப்பது சிலர் தான் , ஆனால் மாணவர்களின் பரிசுகள் எப்படியிருக்கின்றன என்று பார்க்க முடிகிறது.

இந்த இரண்டு பள்ளிகளையும் ஒரு மாதிரியாகக் கொண்டு சிந்தித்தால் இரண்டினூடாகவும் கட்டியெழுப்பப் படும் சிந்தனை முறைகள் , பழக்க வழக்கங்களை நாம் இன்னும் விரிவாக ஆராய வேண்டும் . பல பாடசாலைகளில் இந்நேரம் பாஸ் செய்த மாணவர்களின் பதாகைகள் அச்சாகியிருக்கும் ,ஒரு வருடத்திற்கு பள்ளிக்கூட மானத்தை காப்பாற்றிய வீர் புருஷர்களாக அவர்களை கொண்டாடுவர். மற்றையவர்கள் தாங்களும் அதில் வர வேண்டுமென்றோ அல்லது தங்களின் பிள்ளைகளின் படம் அதில் வர வேண்டுமென்றோ இப்பொழுதிருந்தே தவத்தை ஆரம்பித்திருப்பார்கள்.

நேற்றுத் தான் கடையில் ஒரு பரீட்சை மாதிரி வினாத்தாளை பார்த்தேன் ,"தரம் ஒன்று - தவணை மூன்று " என்று இருந்தது . தலையை எங்கே கொண்டு போய் முட்டி கத்துவதென்று தெரியவில்லை.

எவ்வளவு கவனமாக நாம் அடிமைகளையும் நீதியற்றவர்களையும் மற்றவர்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறையில்லாத மனிதர்களையும்  உருவாக்குகிறோம். குழந்தைகள் பற்றிய மட்டுப்பாட்டினை நாம் உருவாக்க வேண்டும். இப்படி  மந்தையாட்டு  சிந்தனை  முறைகளை , இதயமற்ற சிறுவர்களை உருவாக்குவதை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்து விட்டு முறைமையில் இருக்கின்ற குறைபாடுகளை தீர்ப்பதை பற்றி யோசிக்க வேண்டும் , இணைந்து வேலை செய்ய வேண்டும்,

இப்பொழுதுள்ள நிலைமைகளில்
முதலில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசுகள் கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.இது ஏற்கனவே சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை.   மாலைகள் அணிவிப்பது கூட வேண்டாத வேலை தான் .

மேலும் கொடுமை என்னவென்றால் மாணவர்கள்  காலில் விழுந்து வணங்குவார்கள் ,இவர்களும் ஆசீர்வாதம் வழங்குவார்கள் .இப்படியிருந்தால் ஆசிரியரும் மாணவரும் ஒரே நேரத்தில் புதிதாக ஒரே விடயத்தை உரையாடுவது சிந்திப்பது ,சமதையாக நடத்துவது எப்படி சாத்தியம்? . இவற்றையெல்லாம் எப்பொழுது கைவிட்டுவிட்டு சுயமரியாதை ,சமதர்மம் போன்றவற்றை கற்றுக் கொடுக்கப் போகிறோம்.

ஆசிரியர்கள் பற்றிய மிகையான கற்பனைகளை முதலில் எடுக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் தெரியும். விழுந்து வணங்க வேண்டும் . கேள்வி கேட்க கூடாது . போன்ற பழமைவாதச் சிந்தனைகளை ஊட்டி வளர்ப்பதில் இந்த ஆசிரியர் தினம் ஒரு மகா எடுத்துக் காட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிலும் உள்ள நன்மை தீமைகளை சீர் தூக்கி பார்க்கும் மனநிலையை புத்தி கூர்மையை ஏற்படுத்தி விட்டு ஆசிரியர் தினத்தை கொண்டாடிப் பாருங்கள் . அப்படியொரு தினமே இருக்கது. ஆசிரியர் என்ற சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்கள் நமது காலத்தில்  சமூகத்தால் மீள ஒழுங்கு படுத்தப் பட வேண்டும். பாரம்பரியமான சுய சிந்தனைக்கு எதிரான இந்த கல்வி முறையை கேள்வி கேட்க்கும் ஒரு மாணவரும் ஆசிரியரின் காலில் விழ மாட்டார் . அதனை அறிந்த ஆசிரியர் எவரும் மாணவரை காலில் விழ அனுமதிக்கவும்  மாட்டார்கள்.

இதனை நாம் யாழ்ப்பாணத்தை வைத்து புரிந்து கொள்ள முயற்சித்தோம். மற்ற இடங்களையும் அவரவர்கள் தங்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி முறையை தீர்மானிப்பதில் அதன் வெளிப்பாடுகளை தீர்மானிப்பதில் பள்ளிக் கூடங்களுக்கு தீர்மானகரமான பங்களிப்பு உள்ளது. அவற்றை உரையாடும் வெளிபப்டுத்தும் வல்லமையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 கொஞ்சம் கூட ஜனநாயகமற்ற பண்புகளைக் கொண்ட ஒருத்தரை ஒருவர் போட்டியாளராக புரிந்து கொள்ளும் மனநிலையை மாணவர்களிடம் இருந்து மாற்றியெடுக்க அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய காலமிது என்பதை ஆசிரியர்கள் உரக்கச் சொல்லவேண்டும்.


(குறிப்பு - இதில் விரிவாக ஆராய பட வேண்டிய புள்ளிகள் உள்ளன , சில மட்டுமே இதில் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளன. )

கிரிஷாந்த்.

1 கருத்து:

  1. விழுந்து வணங்குவது பிழை என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

    நான் தரம் 1, 2 படிக்கும் காலத்தில் (கொழும்பில்) பாடசாலை செல்லும் பொது அல்லது வெளியே செல்லும் தாய் அல்லது தந்தை களில் விழுந்து வணங்குவது வழக்கம்.

    யாழ் வந்த பிறகு அந்த பழக்கம் அடியோடு இல்லாது போய் விட்டது.

    விழுந்து வணங்குவதால் தாய், தந்தை, ஆசிரியர், பெரியோர்களை மதிப்போம். மேலும்

    பதிலளிநீக்கு