சனி, 24 டிசம்பர், 2016

இரண்டு காதல் கவிதைகள்



கவிதையின் இருப்பென்பதற்கும் காலத்திற்குமுள்ள உறவென்பது மிகத் தெளிவானது. சில கவிதைகள் சில கால கட்டங்களில் கொண்டாடப்படலாம். பாடல்களாக மக்கள் பாடிக் கொண்டு திரியலாம். ஆனால் கவிதையென்பது அந் நேரக் கிறக்கம் மட்டுமல்ல. புதுவை ரத்தினத்துரையின் கவிதைகளை உதாரணத்திற்கு பார்க்கலாம். ஒரு வரிக்குக்  கூட அதன் காலம் கடந்து எந்தப் பெறுமதியுமல்ல, அவர் எழுதிய  பாடல்களும் ஒரு கால கட்டத்தின் இளைய தலைமுறைக்குக் கொடுத்த எழுச்சியை அதன் தீவிரத்தை தொடர்ந்து கடத்த முடியாமல் போனவை , வெறும் ஆட் சேர்க்கும் கோஷப் பாடல்கள். "எங்கள் துயர் தெரியாது என்னவென்று புரியாது , இங்கிருந்து பாடுகின்ற எங்கள் குரல் கேட்காது" போன்ற வரிகளுக்குள் ஒளிந்திருந்து ஒலிக்கும் குரல் நாங்கள் கடும் தியாகிகள் , எங்களையெல்லாம் நீங்கள் எங்கே கவனிக்கப் போகிறீர்கள் என்ற குற்ற உணர்ச்சியை கேட்கும் மக்களுக்கு உருவாக்கி விட்டு அதனை ஒரு தீவிர மன நிலை போல் காட்டிக் கொள்வது போன்று தான் எனக்குப் படுகிறது. வருகிற தலைமுறைகளில் இலக்கியம் சார்ந்து எந்தப் பயன்மதிப்புமற்ற வரிகளாக அவை போய்விடும்,கேட்காத குரலாகவே போய்விடும்.ஏனெனில் அதற்கு அந்தக் கால கட்டம் கடந்து பேசும் குரல் இல்லை , உள்ளுணர்வில்லை.
சேரன் 

விடுதலைப் போராட்ட காலங்களில் நம்பிக்கையுடன் எழுத வந்த பலரின் ஏராளமான கவிதைத் தொகுப்புக்களை வாசித்திருக்கிறேன். பெரும்பாலானவை உரையாடல் தன்மை வாய்ந்தவை , ஒரு பெருந் தொகுதி மக்கள் கூட்டத்தின் முன் ஆவேசமாக குரலெழுப்பி கைவீசி  முகம் சிவக்கப் படிக்கப்படக் கூடியவை, பிரச்சாரம் தான் அதன் மைய நோக்கம் , நீங்கள் "போரிடவே வருக " என்ற கோஷமும் விடுதலை என்பது  காதலை  விட நட்பை விட ஏன் நமது வாழ்வை விடவும் உயர்ந்தது என்று கனவு கண்ட ஒரு தலைமுறையைத் தான் நாம் இழந்திருக்கிறோம் , அந்தக் கால கட்டத்தில் இப்பொழுதிருப்பதை விட இலக்கியத்தின் குரலுக்கு ஒரு மதிப்பிருந்தது , இப்பொழுதைய விட அதை வாசிப்பதற்கொரு காலமிருந்தது , மக்களிருந்தனர். ஆகவே எழுந்து வரும் கவிதைகள் பெருங் குரலெடுத்து அழவும் போராடவும் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தன. இதற்கு மாற்றான குரல்கள் தனியே ஒலித்தன. ஆனால் மக்களிடம் பெருமளவில் கவிஞர்கள் என்று சென்றவர்கள் காசி ஆனந்தனும் புதுவை ரத்தினதுரை போன்றவர்களே. இந்த மாதிரியான கொடுமைகளும் நடந்து யுத்தம் மேலும் கொடியதாகிவிடுகின்றது.சரி  போகட்டும்.

சேரனின் கவிதைகளை நான் சிறு வயதில் பெரும் ஆவலுடன் படித்திருக்கிறேன். சேரனைப் படிக்கவில்லையென்றால் நீயெல்லாம் கவிஞனே இல்லையென்று ம் நீயெல்லாம் கவிதை யை வாசிக்க வில்லை எனும் ஒரு தலைமுறையிருந்தது. நான் வாசிக்கத்தொடங்கிய காலமென்பது பெருமளவில் நான் மேற்சொன்ன எழுச்சிகள் வடியத்தொடங்கிய காலம் , சமாதானத்தின் பறவை எரிந்த பிறகு வாசிப்புப் பற்றிஎனக்குள் இருக்கும் பிரதான சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஒரு பெருந்தொகுதி மக்கள் கூட்டமும் மூன்று தலை முறைகளும் வாழ்ந்து உயிர் கொடுத்த வரிகள் எனக்கேன்  அந்த வாழ்வைக்கடத்தவில்லை .  அதன் உயிரின் நடுநடுங்குதலை எனது கைகளுக்குள் இரத்தம் தோய்ந்த  துடிக்கும் இதயம் போல் கையளிக்க முடியவில்லை. இது எனது குறையாகவும் இருக்கலாம் , ஆனாலிது எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்படக்கூடிய ஒரு சிக்கல் என்றே நான் கருதுகின்றேன் .நாம் நமது கடந்த தலைமுறைகளை அதன் பாடுகளை , சொல்லி முடித்து விட மாட்டோமா ? அதனைச்சொல்லுகின்ற , சரியான கவிதைக்குரல்களை  இந்தப்பிரச்சாரம் எனும் பெரும் இருண்ட பள்ளத்தாக்குகளில் இருந்து மீட்டெடுத்து விட்டோமா ?  இதற்குத்தான் கறாறான இலக்கம் சார்ந்த விமர்சன முன் வைப்புகள் நமது போராட்ட காலப்பாடல்கள் (அனைத்து ஆயுதக்குழுக்களதும் , பிற இயக்கங்களினதும்), கவிதைகள் , சிறுகதைகள் , நாவல்கள்

போன்றவற்றின் மீது வைக்கப்பட வேண்டும் இதனை ஒரு தனி மனிதனோ அல்லது சிறு குழுவோ செய்யும் பொழுது குறுகிய பார்வை தோன்றிவிடக்கூடிய வாய்புகளும் உண்டு . ஆனால் எல்லோரும் மெளனமாயிருக்கின்ற காலங்களில் யாரேனும் பேசத்தான்  வேண்டியிருக்கிறது.

சேரனின் மேல் உருவாக்கப்பட்டிருக்கும் மிகையான பிம்பம் , அவரை வாசிப்பதற்கு தடையாக இருக்கின்ற ஒன்று  “சாம்பல் பூத்த தெருக்களில்

இருந்து எழுந்துவருக ” என்ற சேரனின் குரல்  புதிதான ஒன்றல்ல , அது அந்தக்காலத்தின் கூட்டு வாக்கியம். அதனைத்தான் எல்லா இயக்கங்களும் வேறு வார்த்தைகளில் சொல்லின . ஈழத்தின் கடந்த முப்பது வருட இலக்கியப்போக்கைப்பொறுத்த வரை அரசியல் நிலைப்பாடு என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது ,   போரிட வரச்சொன்னவர்கள் சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு பயணம் போய்விட்டார்கள் அதைக்கேட்டுப் போராடப்போனவர்கள் செத்துப்போனார்கள்.  அதன் குற்ற உணர்ச்சி  இன்று எழுதும் யுத்தத்தின் கவிஞர்களின் எல்லோரது வரிகளுக்குள்ளும்

இழைந்திருக்கின்றது. இதுதான் எனது சிக்கல் , இப்பொழுது நான் கவிதைக்குரல்களை அதன் அரசியல் நிலைப்பாடுகளில் வைத்து மதிப்பிட முடியுமா ? நான் மதிப்பிட வேண்டும் என்றே சொல்லுவேன். அது அவர்களைக் குற்றம் சாட்டுவதல்ல , இந்த மாதிரியான தீவிர
உணர்ச்சிப்போக்குகளை  புரிந்துகொள்ளுவதும் அதனைப்பற்றிய அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது பற்றியுமாகும்.

சேரனின் ஆரம்பகாலக் கவிதைகள்  தனது தந்தை மகாகவியின் தொடர்ச்சியாக மரபுக்கும்  நவீனத்துக்கும் இடையிலான சொற்களஞ்சியங்களைப் பரஸ்பரம்  பரிமாறிக்கொண்டு எழுந்து வந்தவை.  அதன் பின் சேரன்  இன்று வரை அந்தத் தொடுகையினை கவிதைகள் எங்கும்உருவாக்கியிருக்கிறார் , என்னைக்கேட்டால் அவர் எழுதியது இரண்டே கவிதைகள் என்றுதான் சொல்லுவேன் , அல்லது எனக்குப்பிடித்தது .அந்த இரண்டும் தான்   “ஜே .யுடனான  உறவு முறிந்து மூன்று நிமிடங்கள் ஆகின்றன””சே.யுடனான  உறவு முறிந்த போது” என்ற இரண்டு காதல் கவிதைகளும் தான் அவை  .

அவர் ஒரு பொதுக்குரலாக மிகையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.  அவர் பெரும்பாலும் எழுதிக்குவித்தவை பல்வேறு போராட்ட காலச்சம்பவங்களைக் கவிதையாக்க முனைந்தமைதான். அந்த வகையான கவிதைகளுக்கு  பத்திரிக்கைகளில் வேண்டுமானால்  முக்கியத்துவம் இருக்கலாம் , உலக மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்படலாம் .  எல்லாம் கொஞ்சக்காலம் தான் . விடுதலைப்போராட்டத்தின் நெருப்புக்கங்குகளை  இதயத்தில் சுமந்தவர்களை இது மட்டுமல்ல ஒரு சிறு சொல் கூட பற்றியெரிய வைத்திருக்கும் அந்தக்காலகட்டம் அப்படியானது.  அந்த அனல் காற்றின்  காலத்துக்குப் பின் அதற்கு பத்திரிக்கைச் செய்திகளுக்குண்டான மதிப்புத்தான் உருவாகும் .

சேரன் தீபச்செல்வன் அல்ல ஆனால் சேரனும் தீபச்செல்வனும் ஒரே மாதிரித்தான்  வாசிக்கப்படப்போகின்றார்கள் இந்த அச்சம்தான்  என்னைக்

கவலைகொள்ளச்செய்கிறது.  இந்த இடத்தில் நிலாந்தனால்   இந்தச்செய்திகளை   நெடுங்கவிதைக்கு  உரிய தன்மைகளோடு உருவாக்க முடிகிறது.அவர் தன்னுடைய எழுத்துக்களை  கவிதைகள் என்று சொல்லவில்லை , அவை பரிசோதனை முயற்சிகள் தான்  என்று அவர் கூறுகின்றார்.

 சேரனுடைய கடந்தகால எழுத்துகளை நான் வாசித்த போது மனக்கிளச்சியாகவும் இவை நல்ல கவிதைகள் என்றும் தான் நினைத்திருந்தேன்

ஆனால் முதலிலே சொன்னது போல அனல் காற்றின் பெயர்வுக்குப்பின்   அவை இரண்டு காதல் கவிதைகாளாக மட்டுமே நெஞ்சில் மீதமிருக்கின்றன.

-கிரிஷாந்-











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக