திங்கள், 19 டிசம்பர், 2016

ஈழத்தின் இலக்கியத் தேக்கம்


Creativity Is the Greatest Rebellion In Existence – ஓஷோ

osho
osho

அன்றாட கும்பல் மன நிலைகளிலிருந்து வெளியேற வேண்டுமென்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இலக்கியமோ அல்லது வேறெந்த கலைவடிவமோ தேவையானது. வெற்றுக் கோஷங்களுக்காக இலக்கியம் செய்வதென்பது காலம்தோறும் எண்ணுக்கணக்கற்று உருவாக்கி வந்திருக்கின்றன.அவற்றுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்களும் விருதுகளும் அங்கீகாரங்களும் கூட கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்தக் கும்பல் மன நிலையை ஒரு நல்ல வாசகர் எளிமையாக கடந்து விடுகிறார். இன்றைய சம கால இலக்கிய போக்குகளில் பல் வேறு உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை அரைகுறையாக இருக்கலாம் , ஆனால் தேவையுள்ளது.
நான் ஆரம்பித்த உரையாடலை பற்றி கொஞ்சம் தெளிவு படுத்த விரும்புகிறேன். இன்றைய இந்த அன்றாட இலக்கிய விவகார நிலவரங்களையிட்டு புதிதாக வாசிக்க வருபவர் , அல்லது இந்த உரையாடலில் தொடர்ந்து கலந்து கொள்ள விரும்புபவர்கள் சில புரிதல்களுடன் இருப்பது நல்லது.
வாசிக்கவும் எழுதவும் வருபவர்கள் இந்த கோடிக்கணக்கான கும்பல்களிலிருந்து அவற்றின் சிந்தனைகளிலிருந்து அறுபட்டு , வாழ்க்கையை வேறு விதமாக அணுகக் கூடியவர்கள். அவர்களையிட்டே இந்த உரையாடல் .அதை விட்டுவிட்டு  அந்த கோடிக்கணக்கான மந்தைகளை மேய்ப்பதல்ல இதன் நோக்கம்.
வாசிப்பது , உரையாடுவது என்ற இரண்டு பெரும் நிலைகளை பார்த்தால் இரண்டிலுமே ஒரு ஒத்த தன்மையுள்ளது. வாசிப்பதும் ஒரு உரையாடல் தான் குறித்த எழுத்தாளரும் வாசகரும் உரையாடிக் கொள்ளும் அக உரையாடல்.மற்றைய  உரையாடல் என்பது கூட்டாக நிகழ்வது.
எட்வினின் கருத்துக்கள் கடந்த காலத்திலிருந்து ஒலிப்பவை , நான் சம கால உரையாடல்களை மையமாகக் கொண்டே இருவரின் பெயரைக் குறிப்பிட்டேன். அதனைக் கூட இன்னும் விரிவாக எழுதலாம், ஆனால் எட்வின் இலக்கிய வாசிப்பை நிறுத்தி இன்னொருவகையான வாசிப்பு தளத்திற்கு நகர்ந்து விட்டார். இது இயல்பாகவே இப்படி ஆகின்ற சூழ்நிலை தான் தமிழ்ச்சூழலில் இருக்கிறது. அந்த கால கட்டத்து விமர்சன முறை மற்றும் விடுதலைப் போராட்டம் சார் பிரச்சார இலக்கியங்களின் தீவிர வருகை என்பனவும் இந்த இலக்கிய போக்குகளை தீர்மானித்திருக்கலாம். அத்தகைய பிரச்சார எழுத்துக்கள் அதன் தேவை முடிந்ததும் காலாவதியாகிவிடும். நமது சூழலில் நடந்திருப்பது அது தான்.
சிவத்தம்பி கைலாசபதி போன்றோரையே “முடிசூடா மன்னர்கள்” என்று குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. அவர்களுடைய பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆனால் அவர்கள் உருவாக்கியதை தொடர்ந்து வளர்த்துச் செல்ல யாருமில்லாது போனதும் துர திருஷ்டம் தான் ,
இவர்களுக்கு மாற்றாக பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இயங்கியவர்களில் அ.யேசுராஜாவின் பங்களிப்பை பெரிதும் மதிப்பிடும் அவர்களது தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் உரையாடியிருக்கிறேன், அவரது பங்களிப்பையும் குரலையும் கூட நாம் கால கட்டத்துடன் இணைத்தே மதிப்பிட முடியும்.

கடந்த காலத்தை மதிப்பிடுவதற்கு நம்மிடம் எந்த முறையுமில்லை . அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த அத்தனையையும் படித்து விட்டு விமர்சனம் செய்து அதிலிருந்து எழுந்து வரக் கூடிய நம் இலக்கிய வரலாற்றைக் கட்டியெழுப்ப நம்மிடம் அந்த கால கட்ட எழுத்துக்களும் விமர்சனங்களும் தானிருக்கின்றன. அவை கூட மிகவும் கேள்விக்குள்ளாக்கப் படக் கூடிய ரசனைகள் .
அவர்களில் பெரும்பாலானவர்கள் வாசகர்களா? என்பதே திகிலூட்டும் கேள்வி. இலக்கியங்களிலிருந்து அவர்கள் எடுத்துக் கொண்டது பெரும்பாலும் அரசியல் சித்தாந்தங்கள் , அல்லது சில எளிமையான கருத்துக்கள் .விடுதலைப் போராட்டம் எழுச்சிபெற்ற காலத்தில் அவர்கள் இலக்கியத்தைப் பற்றி குறைவாக எழுதியதால் இலக்கியம் தப்பித்தது. அதைத் தாண்டி அவர்களிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்றியது விடுதலைப் போராட்டத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று. ஆனாலும் இன்று உருவாகியிருக்கும் “ஈழத்து இலக்கிய போக்கு ” என்ற சொல்லாடல் கூறி நிற்கும் வரலாற்றை சிவத்தம்பி கைலாசபதி போன்றோர் இருந்த மையங்கள் அதிகார பூர்வமாக நிறுவின. நிறுவிக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன.ஆகவே இது போன்ற அரை குறை வரலாற்று நிலையிலிருந்து இன்று நாம் தொல்லை பட்டுக் கொண்டிருப்பது ஒரு மதிப்பீடு சார்ந்த எழுத்துத் தளத்தை நமது தலைமுறையில் உருவாக்குவது பற்றித் தான். அதற்கு வாசிப்பை விட்டால் வேறு வழிகளும் இல்லை.
இப்பொழுது இருக்கும் இலக்கியச் சூழலில்  யார் வாசகர் ? யார் எழுத்தாளர் ? எது புத்தகம் ? யார் விமர்சகர் ? போன்று எண்ணற்ற கேள்விகளுடன் நிற்கிறோம் ,
ஒரு பொது விவாத தளத்தையோ அல்லது வித்தியாசமான தீவிரமாக இயங்கும் தளங்களையோ நாம் உருவாக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களில் ‘யாழ் . இலக்கிய குவியம் “இயங்கிய அளவு கூட இலக்கியத்திற்காக இயங்குதல் என்ற நிலைமை தோன்றவேயில்லை.
தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கை பொறுத்தவரையில் பல்கலைக் கழகத்தின் செயல்பாடு  பூச்சியம். அதனை அவ்வாறு நாம் எதிர்பார்க்காத தேவையில்லைத் தான். அதன் கும்பல் மன நிலைக்குள்ளிருந்து யதார்த்தனும் கௌதமியும்  இயங்கும் பாட்டை தனிப்பட்ட ரீதியில் நானறிவேன். அறிவுத் துறைக்கும் பல்கலைக் கழகத்திற்கும் சம்பந்தமேயில்லை,
ஆக வெளியிலிருக்கும் வாசகர் இலக்கியத்தை நோக்கி எப்படி நகர்வது என்பது தான் இங்குள்ள சிக்கலென்று நான் கருதுகிறேன் , எட்வின் கௌதமி யாதார்த்தன் ஆகியோரின் உரையாடலில் இந்த கேள்வி அடியாழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னும் சில நண்பர்களும் உட் பெட்டியில் உரையாடியது இதைத் தான் , ஆகவே நாம் சில நடைமுறை சாத்தியமான வழிகளில் இலக்கியத்தை உரையாடவும் பரவலாக்கவும் வேண்டும். முதலில் இலக்கியத்தை நாம் புரிந்து கொள்ளவும் அதை பற்றி விவாதிக்கவும் பழக வேண்டும் , இந்த இணைய வெளி நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு.  வெட்கமற்று ஈவிரக்கமற்று தமக்கு சரியென்று படுவதை தமக்கான நியாயங்களுடன் முன்வைக்கப் பழக வேண்டும்.
அது தான் எது கவிதை என்பதை நோக்கி நம்மை நகர்த்தும் எது இலக்கியம் எவர் எழுத்தாளர் இலக்கியம் எதற்குப் போன்ற குடைந்தெடுக்கும் ஆயிரம் கேள்விகளை தீர்த்து வைக்கும். வெற்று அடையாள அரசியலைக் காவும் இலக்கிய மொண்ணைத் தனங்களிலிருந்து வாழ்க்கையை நோக்கித் தன் கண்களைத் திறக்கும்.


-கிரிஷாந்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக