செவ்வாய், 20 டிசம்பர், 2016

மீண்டும் ஒரு கவிதைக் காலம்




 "Touch Screen " என்ற கல்பற்றா நாராயணனின் கவிதையொன்றை குமரகுருபரனின் கவிதை வெளியீட்டில் ஜெயமோகன் குறிப்பிட்டிருந்தார். மிக அற்புதமான கவிதையொன்று, அதன் உள்ளடக்கம் இப்படியிருக்குமென்று அவர் சொன்னார்.

"அப்பிடியில்லைத் தாத்தா ,இப்பிடி  என்று சொல்லி  பேரக்குழந்தை எனது செல்பேசியை வாங்குகிறாள் ,தண்ணீரின் மேல் பூச்சிகள் பறந்து செல்வதைப் போல் அவளுடைய விரல்கள் தொட்டு , நான் தொட்டால் எழாத உலகங்கள் அதிலிருந்து வருகிறது , வண்ணங்கள் விரிகின்றன , எழுத்துக்கள் வருகின்றன , போர் வீரர்கள் வாளுடன் அலைகிறார்கள், கொண்டா என்று சொல்லி வாங்கி நான் அழுத்தினால், அது உறைந்து நின்று விடுகிறது , நீங்க அழுத்திறீங்க , மெல்லத் தொட்டாப் போதும் , இப்பிடி மெல்லத் தொட்டாப் போதும் , தொடவே வேண்டாம் அது மாதிரி  காட்டினாலே போதும் என்றாள், அப்ப இது தானா ரகசியம் , இத்தனை வயது வரை மெல்லத் தொட வேண்டிய இடங்களிலெல்லாம் வன்மையாகத் தொட்டது தான் என்னை இங்கு  கொண்டு வந்து  நிறுத்தியிருக்கிறதா? ஓங்கி உதைத்துத் திறந்த கதவுகள், வன்மையாகக் குரல் எழுப்பிய முற்றங்கள் , மிதித்துத் தாண்டிய தொலைவுகள் , இப்படித் தாண்டி வர வேண்டியவை தானா ?"

என்று அக் கவிதையின் உள்ளடக்கத்தை கூறியிருந்தார் , இது போன்றதொரு கவிதையைப் படித்தே நீண்ட காலமாகின்றது. இப்பொழுது உள்ள கவிதைப் போக்குகளை தமிழில் எடுத்துக் கொண்டால் மிகவும் தீவிரமற்ற காலப்பகுதியாகத் தானிருக்கிறது. ஜெயமோகன் அந்த உரையில் குறிப்பிடும் பல விடயங்கள் எனக்கு உடன்பாடானவையே. தமிழில் இன்று உருவாகியிருக்கும் கவிதைப் போக்கென்று அவர் தமிழ் நாட்டின் கவிதைகளையும் ,அதைத் தாண்டி தொகுப்புகள் வழியாக அறிமுகமாகும் ஈழத்துக்கு கவிதைகளையும் வைத்தே அவருடைய மதிப்பீடு அமைந்திருக்கும் என்ற படியால் , ஈழம் சார்ந்து தொடர்ந்து கவிதைகளை வாசித்து வருபவன் என்ற அடிப்படையில் எனது சில அவதானிப்புக்களை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

கிழக்கில் உருவாகியிருக்கும் போக்குகளையும் வடக்கின் போக்குகளையும் தெளிவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கிழக்கின் போக்குகளை அதிகம் கையாள்பவர்கள் அல்லது புதிய போக்குகள் தொடர்பாக உரையாடக் கூடியவர்கள் ஏதோவொரு வகையில் ரியாஸ் குரானாவின் கவிதை பற்றிய உரையாடல்களை கவனித்து வருபவர்களாகத் தானிருக்கும். கவிதைக்குள் இயங்கும் மொழியின் உளவியல் பற்றியும், "நவீன கவிதை காலாவதியாகி விட்டது"  என்ற அறிவிப்புடன் வெளிவந்த அவருடைய கட்டுரைத் தொடர்களாகட்டும் அவர் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்தி வருவதாகட்டும் பெருமளவில் கிழக்கின் கவிதைப் போக்கில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி வருகின்றது. வடக்கின் கவிதைப் போக்கில் புதிதாக எழுதி வருபவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுபவர்கள் பெரும்பாலும் இத்தகைய உரையாடல்களில் இருந்து விலத்தியே இருப்பவர்கள் , அவர்களுடைய போக்குகள் வேறு வகையில் உருவானவை , ஆதி பார்த்திபனின் பிரியாந்தி அருமைத்துரையின் யோகியின் கவிதைகள் பற்றித் தான் எனது கரிசனை உள்ளது. ஈழம் அல்லது பொதுவான தமிழ்ச்சூழலில்  இவர்களது குரல் முக்கியமானதென்று நான் கருதுகிறேன்.

கிழக்கைப் பொறுத்த வரையில் ஜம்சித் சமான் , சாஜித் , நஸீஹா முகைதீன் ஆகியோரை எதிர்காலத்தில் பங்களிப்பை வழங்கக் கூடிய  வாய்ப்பிருப்பர்களாக கருதுகிறேன்.

இவர்களை பற்றிய தனிப்பட்ட விரிவான குறிப்புகளை எழுத வேண்டும். இப்பொழுது எனது கவிதை பற்றிய ரசனை, தேர்வு எப்படி உருவாக்குகிறது என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

நீண்ட நாட்களின் பின் நான் ஆரம்பத்தில் வாசித்த கவிதைத் தொகுப்புக்களை மீண்டும் வாசித்தேன் இன்றும் எனது தேர்வில் , பரிந்துரையில் மாற்றமில்லை. சுகுமாரனின் "கோடைகாலக் குறிப்புகள் " சேரனின் "நீ இப்பொழுது இறங்கும் ஆறு " சிவரமணியின் கவிதைகள் , எஸ்போஸின் கவிதைகள் , அஸ்வகோஷின் "வனத்தின் அழைப்பு " ஆத்மாவின் "மிக அதிகாலை நீல இருள் " , ஊர்வசி , பா.அகிலன், நட்ஷத்திரன் செவ்விந்தியன் ஆகியோரின் கவிதைகள், மனுஷ்ய புத்திரன், அனாரின் "உடல் பச்சை வானம் " ... இவை தான் எனது தமிழ் நவீன கவிதை  வாசிப்பில் நான் கருதும் முக்கியமான வாசிப்பு நிலைகள் . மரபு  என்று பார்த்தால் ஆண்டாள் , கபிலர் , கணியன் பூங்குன்றனாரின் இரண்டு கவிதைகள் , திருவாசகம் இவர்களிலும் இவற்றிலும் தான் எனது வாசிப்பின்  முக்கியமான  திருப்பங்களை ,அனுபவங்களை ஏற்படுத்தியிருப்பவர்கள்.

சேரன்
 சுகுமாரன் 

                 

இவர்களைப் பற்றியும்  இவர்களது கவிதைகளை நான் ஏன் முக்கியமானதென்று கருதுகிறேன் என்பது பற்றியும் விரிவாக எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன்.

இப்பொழுது வடக்கிலிருந்து எழுத ஆரம்பித்த அதன் சூழலிலிருந்து எழுந்த கவிதைகளின் குரல்களையும் அதன் போக்குகளை வடிவமைத்த காரணிகள் பற்றியும் எனது அவதானிப்பை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலில் ஆதி பார்த்திபன், பிரியாந்தி அருமைத்துரை , யோகி ஆகியோரின் காலகட்டம் கிட்டத் தட்ட ஒன்றே. 2009  களின் பின்னர் தான் அதிகமானளவு கவனத்திற்குள் இவர்கள் வந்தார்கள் , ஆனால் ஆச்சர்யமான அளவில் மூன்று பேருமே மூன்று வித்தியாசமான ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத போக்குகளையும் கவிதை முன்வைப்புக்களையும் கொண்டவர்கள்.

ஆதியின் கவிதைகளின் பொதுப்போக்கை பிரிவதும் சேர்வதும் என்றும் ,பிரியாந்தி யுத்தமும் காதலும் , யோகி உள்ளமும் இறையும் என்றும் சுருக்கிக் கொள்ளலாம் . ஏதோவொரு  நிலையில் இவர்களின் முக்கியமான கவிதைகளிலெல்லாம் இந்தப் பொதுப்போக்கை அவதானிக்கலாம். இவர்கள் மூவரையும் ஓரளவு அறிந்தவன் என்று வகையில் எழுத்துக்களுக்கு ஊடாகவும் தனிப்பட்ட உரையாடல்களின் வழியும் இவர்களை  பற்றிய எனது கருத்துக்களை எழுதவிருக்கிறேன். முதலில் ஆதி பார்த்திபனுடைய  கவிதைகளை பற்றி அடுத்த கட்டுரையினை எழுதப் போகிறேன்.

ஆதி பார்த்திபன் 


கிரிஷாந்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக