புதன், 19 ஜூலை, 2017

வாழ்க்கைக்கான நியாயமும் நியாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையும்





கொஞ்சம் பழைய 'பன்ச் டயலக்' போலத் தான் மேற் சொன்ன வாக்கியம். இலட்சியவாதியின் குரல் போலவும் தோன்றும். ஆனால் இவ்வளவு காலத்தில் வாழ்க்கையென்ற ஒன்றில் ஏதாவது மாறியிருக்கிறதா என்ன. இரண்டு திரைப்படங்களை முன் வைத்து இந்த வாதத்தை தொடரலாம்.

ஒன்று 'Njaan' என்ற மலையாளத் திரைப்படம். 

சுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம் 

கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற  எண்ணம்  நீண்டகாலமாகவே மனதில்  கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனசை ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. எங்கும் விரியும் நிறங்களும் உலகமும் காலின் கீழேயும் கண்ணின் முன்னேயும் விரிவது தான் எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித முகங்களையிட்டு அஞ்சுகிறேன். அவற்றில் உள்ள வெறுப்பும் அன்பற்ற புன்னகையும் நச்சுப் புகையை முகத்திலெறிவது போலிருக்கிறது. ஒரு சில மனிதர்களதும் குழந்தைகளின் முகங்களும் மட்டுமே முகம் என்றால் நினைவில் மேலெழுந்து வருகிறது. 

ஒரு கவிஞனின் சுதந்திர வேட்கை, அக்டிவிஸ்ட்டின் சமூக நெருக்கடி, காமத்தின் பெரும் அல்லாடுதல், பெண்களின் முடிவற்ற உருவங்கள் நிகழ்த்தும் ஆணின் இருப்பு, இருட்டில் கசிந்து கொண்டேயிருக்கும் பெண்களின் கண்ணீர், கவிதையின் ஒத்தடம், இயற்கையின் முடிவற்ற காட்சிகள், தனிமனித அகத்தின் சிக்கல்களும் சமூக விடுதலை என்ற கனவும் எதிர்கொள்ளும் முரண், மாந்திரீகமும் தர்க்கமும் கலந்து புரளும் வாழ்க்கையும் என்று படத்தின் பின் நினைத்துக்கொண்டேயிருக்க ஏராளம் இருந்ததன. 

கே டி என் கோட்டூர் என்ற இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த ஒருவரைத் தேடும் நவீன இளைஞன் ரவி சந்திரசேகரன் என்ற கதாபாத்திரம் கோட்டூரின் கதையைத் தேடி கோட்டூருக்குச்  செல்வதும் ஒரு நாடகப்பிரதியை தயாரிப்பதும் தான் ஒரு வரிக்கதை.



ஆனால் காலமும் நிலமும் மாற மாற கதைகள் விரியும் அற்புதம் ரஞ்சித்தால் திரையில் சாத்தியமாகியிருக்கிறது. டி. பி. ரஜீவனின் " கே டி என் கோட்டூர் எழுதும் ஜீவிதம் " என்ற மலையாள நாவலை அடிப்படியாகக் கொண்டே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் நாவலுக்கேயுண்டான அக தரிசனமும் மௌனமும் வாய்ந்த பகுதிகளை வெட்டி எடுக்கலாம்.  சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.

நகுலன் என்ற கதாபாத்திரம். கோட்டூர் பிறந்தவுடன்  கோட்டூரின் தாய்க்கு முலைப்பால் சுரக்கவில்லை. ஆகவே அந்த ஊரிலிருந்த குறத்தி ஒருவரிடம் முலைப்பால் குடிக்க கொடுக்கப்படுகிறார். குறத்திக்கு இன்னொரு மகனுண்டு, அது தான் நகுலன். இருவரும் அடுத்தடுத்த வயதுள்ளவர்கள். சிறுவயதுமுதல் ஒன்றாகவே திரிகிறார்கள். அவர்களின் சினேகம் வளரும் விதம் அப்படியானது. ஒரே தாயின் முலையில் பால் குடித்தவர்கள். நதியும் வயலுமாய் ஓடித்திரிந்து  விளையாடுகிறார்கள். கோட்டூரின் தகப்பனுக்கும் குறத்திக்குமிடையில் முன்னேரே தொடர்பிருக்கிறது, இருவருக்கும் பிறந்தவன் தான் நகுலன். கோட்டூரின் தகப்பன் இறந்த போது குறத்தி மரணவீட்டில் தலைவிரி கோலமாய் கிடந்தது அழுகிறாள். அதன் போது உறவுக்காரரினால் தலையைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்று மகனும் தாயுமாய் தள்ளிவிடப்படுகிறார்கள். பிறகவர்களின் வீடும் எரிக்கப்படுகிறது. அதன் பின் வளர்ந்து இளைஞனாகும் வரையிலும் நகுலனும் கோட்டூரும் சந்தித்துக் கொள்ளவில்லை. வளர்ந்த நகுலனை டவுனில் சென்று படித்துவிட்டு சமூகத்தை மாற்ற நினைக்கும் இளைஞனான கோட்டூர் வழியில் சந்திக்கிறார். தனக்கு முலைப்பால் தந்த தாயைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார். அவர் மனம் பேதலித்த நிலையில் வீட்டிலிருக்கிறார். அவரைக் காணும் பொழுது " என்னை உங்களுக்குத் தெரிகிறதா?" என்று கோட்டூர் கேட்கிறார். அதற்கு குறத்தி தகப்பனிடம் முன்னொருதடவை அவள் சொல்லிய பதிலான," உங்களைத் தெரியும், ஆனால் அதை மற்றவர்களிடம் சொல்ல முடியாது" என்று சொல்கிறாள். 

இடையில் ஊரில் இருந்த பணக்காரன் ஒருவன் ஆட்களை வைத்து கோட்டூருக்கு அடிக்க வைக்க முனைந்த போது, இடைவழியில் வந்து நகுலன் கோட்டூரைச் சந்தித்து அழைத்துச் செல்கிறான். "உனக்கெப்படி அவர்கள் என்னை அடிக்க வந்தது தெரியுமென்று" கேட்கும் போது  ' நான் முக்காலமும் உணர்ந்த குறத்தியின் மகனல்லே ' என்று கூறிச் சிரிப்பான். பின்னர் கோட்டூர் உறவு வைத்திருந்த ஜானு என்ற தாழ்த்தப்பட்ட  பெண்ணுக்கு கோட்டூரினுடன் இருந்த உறவில் குழந்தை கருக்கொள்கிறது. கோட்டூர் ஊரில் இல்லாத நேரத்தில் நடக்கும் பொழுது. தாய்க்கு நிகராக இருந்து கோட்டூரினை வளர்த்த பெண் அந்த கர்ப்பத்தை கலைக்கும் ஏற்பாட்டினை செய்கிறாள். அந்த காட்சி மிகவும் தீவிரமானது. அந்தப் பெரும் வீட்டில்  கடும் இருட்டின் மௌனம் இடிந்து விழ ஜானு கதறும் சத்தம் ஒரு மாபெரும் கேவல். பின் அவள் வீட்டை நீங்கி வெளியில் சென்று குளத்தடியில் விழும்போது நகுலன் தான் அவளைக் கொண்டு சென்று மனைவியாக்குவான். பின்னர் கோட்டூர் திரும்பி வந்த பொழுது மனம் பேதலித்த குறத்திக்கு பக்கத்தில் வைத்து ஜானு நடந்ததைச் சொல்லுவாள் அதற்குக் கோட்டூர் " எல்லா மகாபாவமும் என்னால் தான் உண்டானது" என்று சொல்ல ஜானு " அப்படி அல்ல, எங்கிருந்தோ ஒருவர் தீர்மானிக்க எல்லாம் நடக்கிறது என்று சொல்வாள். அதற்கு மனம் பேதலித்த குறத்தி " எல்லாமே முட்டாள்களின் நாடகம். அவ்வளவு தான் மக்களே" என்பாள்.

பின்னர் கோட்டூரை வளர்த்த பெண்ணுடன் இறுதி வாக்குவாதத்தில் கோட்டூர், நிகழ்ந்தவற்றுக்கு நீ தான் பொறுப்பு என்பதைச் சொல்லுவான். தனது சொத்துக்களையெல்லாம் நகுலனுக்கு எழுதுவதாக கோட்டூர் அறிவித்த வேளை அந்த பெண் கேட்பதற்கு " நான் என் அப்பன் செய்த பாவங்களையும் தன்னுடைய  பாவங்களையும் போக்கவே இதைச் செய்வதாகவும். இந்த வீட்டின் இருட்டில் உள்ள பாவங்களெல்லாம் நீங்களே பாதுக்காக்கிறீர்கள் என்றும் நகுலன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்தவன் அவனுக்குச் சொத்தில் உரிமை உண்டெனவும் கூறுவான். 

இங்கு கதையை நான் கத்தரித்து கத்தரித்து நகுலனின் கதையை மட்டுமே தந்திருக்கிறேன். திரைக்கதை நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்குமாக நகர்ந்து மீண்டபடியிருக்கும் தொடர்ச்சியான ஒரு நிகழ்த்துகையாக இருக்கிறது. இதனை வெளிப்படுத்திய முறையிலும் கதாபாத்திரங்களின் தன்மையிலும் " நூற்றாண்டுகளின் தனிமை " நாவலின் இயல்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு கோட்டூர் இறுதியாக மணம் முடிக்கும் பெண் பார்வையற்றவள். அவள் சொல்லுவாள் என்னால் பார்க்க முடியும். என்னுடைய பார்வை என்பது அறிவு. அதை என்னால் விளக்க முடியாதென்று.



 ஊரிற்கு பக்கத்தில் உள்ள கிணற்றில் நகுலன் விழுந்து விட்டதாக அவள் சொல்லும் போது நகுலன் கைது செய்யப்படுகிறான். காட்சிகள் குறியீடுகளாக அவளுக்குத் தெரிகிறது. திருமணம் முடிந்து முதல் முதலாக வீட்டுக்கு வரும்போது அண்ணார்ந்து மேல் மாடியை பார்த்து சிரிப்பாள். கோட்டூர் ஏன் அப்படி சிரித்தாய் என்று கேட்பார். அங்கே உங்களது அம்மாவையும் அப்பாவையும் கண்டேன், அவர்கள் என்னை வாழ்த்தினார்கள் என்பாள். கோட்டூர் சிரிப்பார். நீங்கள் நம்பவில்லையா, என்னால் பார்க்க முடியும் என்று அவள் சொல்லுவாள். அவளுக்கு ஒருவித மாய சக்தியுண்டென்பது போன்ற தோற்றமிருக்கும். இதில் அசாத்தியமான வகையில் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இயக்குனர் ரஞ்சித் அவற்றை அதன் போக்கில் விட்டுவிடுகிறார். இதனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனளவில் இருட்டில் தனித்திருக்கும் ஆழ் கிணறுகளாகவும்  அதில் விழும் கற்களாக நினைவுகளையும் மாற்றுகிறது. 

இறுதியாக கோட்டூர் வீட்டை விட்டு வெளியேற முதல் இரண்டு காட்சிகள்.

ஒன்று, தாய்க்கு நிகராக தன்னை வளர்த்த பெண்ணுடன் கோட்டூர் விவாதித்த இரவில் அந்தப் பெண் ஜானுவுக்கு கருக்கலைத்த இடத்திற்குச் சென்று அதனைத் தொட்டுப்பார்க்கிறார் கையெல்லாம் இரத்தம் பெருகி நிலத்திலிருந்து இரத்தம் பீறிடுவது போன்று பிரமையேற்படுகிறது. அந்த இடத்தில் அவர் இறந்து போகிறார். கோட்டூர் அவரது உடலைக் கூட பார்க்க வராமல் அறைக்குள் நின்று கொண்டிருப்பார். அப்பொழுது கண்ணாடியில் அந்தப் பெண்ணின் ஆத்மா பேசுவது போன்றொரு காட்சி, அதில் அந்தப் பெண் தனது தரப்பைச் சொல்லுவாள்." உனக்கு எந்தச் சங்கடமும் வேண்டாம், மரணத்தின் மூலம் நான் சுதந்திரமாகி விட்டேன். நீ சொன்னது போல இந்த வீட்டின் இருட்டை நான் பாதுகாத்தேன், ஆனால் அந்த இருட்டில் தான் எனது வாழ்க்கையும்  சங்கிலியிடப்பட்டிருந்தது. உருவமோ நிழலோ இல்லாத,  வராந்தாக்களின் மூலையில் இருட்டில் வாழும் தாய்மார்களை பற்றி நீங்கள் என்றாவது புரிந்து கொண்டீர்களா? மகன்களே, அவர்களின் கண்ணீரைப் பார்த்ததுண்டா நீங்கள்? அவர்களுடைய அழுகைகள், வெளிச்சம் விழுகின்ற அந்த வீடுகளில் அவை இல்லை. ஆண்களின் பாவங்கள் அவர்கள் உடம்பிலும் மனசிலும் அந்தக் காயங்கள் அவர்களை பாதித்ததும் இருக்கிறது. உன்னாலும் அதனை மாற்ற முடியாமல் போகலாம். ஏனென்றால், நீ இன்னொன்றின்  தொடர்ச்சி. மூன்று காலங்களிலும் நீ இன்னொன்றின் தொடர்ச்சி. நீ தொடர்ச்சி மட்டுமே. " 



இரண்டாவது, இறுதிக் காட்சியில், பார்வையில்லாத தன் மனைவியுடன் கோட்டூர் உடலுறவு கொண்டு முடித்த வேளை அவளின் முகத்தில் ஜானுவையும் குறத்தியையும் தாயிற்கிணையான அந்தப்பெண்ணையும் காண்பான். அவன் திடுக்கிட்டெழுந்து ஓடி வெளியில் வருவான். வியர்த்து நிற்கும் அவனிடம் அவனது தந்தையின் ஆன்மா நெருங்கி வரும், "  அப்பா, தவறான செயல்களை மனதில் நினைத்து, சுயமைதுனம் செய்து கழிந்த என் இளமை, கண்களை மூடி காம சுகத்தை அனுபவித்தது, இப்பொழுதுள்ள முகத்தை மறக்க வேறொரு முகத்தை நினைத்து, என்னுடைய இளமை காமத்தின் பாவத்தில் கழிந்து போனது. இப்பொழுது மனசிலுள்ள கெட்டது அழிஞ்சு, ரூபங்கள் கண்ணில் தெளிவாகத் தெரியும் பொழுது, மோகத்தின் சுகம், அப்பா, அதனால் தான் இந்த வீடெனக்கு நரகத்தைப் போலிருக்கிறது. துன்புறுத்துகிறது. உங்களிடமிருந்து, உங்களின் விந்திலிருந்து,  பரம்பரை பரப்பாரையான தந்தைகளின் நோயை நான் பெற்றிருக்கிறேன். காலம் எனக்கு மீளப் பிறப்பதற்கொரு வாய்ப்பைத் தந்திருக்கிறது. பால்யத்தில் கண்டது போலே, தெளிந்த பகல்களிலே வானத்தில் பயணம், மரக்கிளைகளில் தொட்டு ஆகாயத்தை பிடித்து, மேகத்தை சீவி விட்டு இன்னொரு கிளைக்குத் தாவி... என்ற என்னுடைய சொப்பனங்கள் எனக்குத் திரும்பவும் தேவை. எனக்கு இந்த வீட்டின் சுவர்களுக்குள் அலையவும், விளக்கின் வெளிச்சத்தின் கீழ் சாகவும் விருப்பமில்லை. என்னை யாத்திரைக்கு விடுங்கள்"

இந்த காட்சிகளை துண்டங்களாக்கி தொகுத்திருக்கிறேன். படத்தில் இன்னும் விரிவாக வரும்.  பின்னனியில் அழுதுகொண்டேயிருக்கும் தீவிரப்படுத்திக்கொண்டேயிருக்கும் வயலின் இசையும் இடையிடையில் வரும் சாஸ்திரிய சங்கீதமும், கவிதைப் பாடல்களும் இன்னொரு வகையான அனுபவத்தை தந்தன.

விடுதலை அனுபவம் என்பது என்ன?, ஒரு பெண்ணுக்கு மரணத்தில் கிடைக்கிறது இன்னொருத்திக்கு மனம் பேதலித்து விடுகிறது. ஒருத்தி கைவிடப்படுகிறாள், இன்னொருத்தி குருட்டுக் கண்களுடன் தனித்து விடப்படுகிறாள். ஆண் வீட்டை விட்டு வெளியேறுதலையே விடுதலை என்கிறான். தன்னால் இந்தச் சுவர்களுக்குள் அலைந்துகொண்டிருக்க முடியாது. இந்த விளக்கின் ஒளியில் ஒரு பூச்சியைப் போல மடிய முடியாதென்று சொல்கிறான். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் இதுபோன்ற அலைந்துகொண்டேயிருக்கும் முகங்களை நீரில் விழுத்திப் பார்த்துக்கொண்டேயிருக்கப் போகிறோம். தன்னை அறிதலென்பது என்ன ? தானே தன்னை அழிப்பது மட்டும் தானா? 

இதனை எழுதிக்கொண்டிருக்கும் போது அச்சமும் தெளிவற்றதுமான அந்த ஆயிரக்கணக்கான முகங்களாலான உடலை எனக்குள் உணர்கிறேன். 

ராஷ்மோன் மனநிலை 

ஆம், அப்படித் தான் சொல்ல முடியும் எளிமையான ஒரு கதை. விசாரணையின் பின் அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது கைவிடப்பட்ட  கோயிலின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்கும் துறவிக்கும் கிழவனுக்கும் வழிப்போக்கன் ஒருவனுக்குமிடையில் இடம்பெறும் உரையாடலாகவே காட்சிகள் அகல்கின்றன. காட்டு வழியால் செல்லும் போது ஒரு திருடனால் தனது கணவன் தோற்கடிக்கப்பட்டு கட்டப்பட்ட பின்னர் மனைவி பாலியல் உறவுக்கு உட் படுத்தப்படுகிறாள். அதற்கான விசாரணை இடம்பெறுகிறது அதன் போது குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர்கள், அதன் பிறகான சாட்சிகள் ஆகியன விசாரிக்கப்படுகின்றன. அவற்றில் எது நியாயம் எது உண்மை ஏன் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற தரப்புக்களை பற்றிய விவாதம் தான் படம்.



படத்தின் சில காட்சிகளையும், அதனூடாக சித்தரிக்கப்படும் மனித அக நிலையும் மிக விரிவான ஒன்று. முதல் குறிப்பிட்ட 'ஞான்'  சமீபத்திய காலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம், ' ராஷ்மோன்' 1950 களில் வந்த படம் இரண்டுக்குமிடையில் ஏராளமான கால இடைவெளி உண்டு. ஆனாலும் இரண்டுக்குமிடையில் ஒரு தொடர்ச்சி உண்டு. அது உரையாடும் மனநிலை காலங்களுக்கிடையில் வேறுபடவில்லை. இங்கு பாத்திரங்களும் சூழலும் தான் வேறுபடுகின்றது. ராஷ்மோனினதும் சில பகுதிகளை எடுத்து உரையாடுவது மேற்சொன்ன மனநிலைகளுடனான தொடர்ச்சி பற்றி சிந்திக்க உதவும்.

ராஷ்மோனின் பிரச்சினை அந்த வழக்கு. அந்த வழக்கில் ஒரு திருடன், ஒரு பெண், அவள் கணவன் ஆகியோரின் கதைகள். மூன்றும் மூன்றுவகையான கதைகள். இவற்றை ஏன் இவர்கள் சொல்கிறார்கள். ஒரே வழக்குத் தொடர்பில் ஏன் இப்படி ஒரு நிலை. ஒவ்வொருவரும் தனக்கான நியாயங்களை எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள். எதை நம்ப விரும்புகிறார்களோ அதுவே நடந்ததாக தங்களையும் நம்ப வைத்துக்கொள்கிறார்கள். அதற்குள்ளிருக்கும் ஆழமான மனித உறவுகளுக்கிடையிலான சிக்கல் தன்மையும், பாவம், நியாயம் ஆகியன பற்றிய விவாதங்களும் ராஷ்மோனின் மனநிலையாக உள்ளது. ஆழமான பாவம் ஒரு தீராத தொடர்ச்சி. மனிதர்கள்  பாவங்களுக்கிடையில் முடிவற்று ஒன்று மாறி ஒன்றுக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு உயிர்த் தொகுதி. 

ஆக இந்த மூன்று கதைகளின் பின்னர், அந்த சாட்சியான கிழவனும் ஒரு கதையைச் சொல்வார். இது தான் நடந்தது. நான் எனது கண்களால் பார்த்தேன் என்று. அது இன்னொரு கதை. யாருடைய கதையுமே ஒன்று இன்னொன்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக இந்த நான்கு கதைகளிலும் வெளித்தெரியும் மனித மனத்தின் பாவத்தின் நிழல் விழுந்த பக்கங்களை துறவி பார்க்க முடியாமல் தவிர்த்து ஓடுகிறார். அவர் மனிதர் மீது நம்பிக்கை கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். 

"மனிதர்கள் சக மனிதர் மேல் நம்பிக்கை வைக்கவில்லையென்றால் உலகம் நரகமாகிவிடும்" என்பார். 

அந்த வழிப்போக்கன், " ஆம் உண்மை தான் இந்த உலகம் நரகம் தான்"

"இல்லை, நான் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்"

"இந்த இடம் நரகமாகுவதற்கு நான் விரும்பவில்லை"

" நீங்கள் சத்தமிடுவது உதவாது, சிந்தியுங்கள் இந்த மூன்று கதைகளில் எது நம்பத்தக்கது.'

இவ்வாறு இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது அந்தக் கிழவன். " ஒன்றும் தெரியவில்லை" என்று சொல்வார். அதன் போது வழிப்போக்கன், "முடிவில், மனிதர்களின் செயல்களை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை"

அதன் பின், அந்தக் கைவிடப்பட்ட கோயிலின் இன்னொரு பகுதியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கும், சென்று பார்ப்பார்கள். வழிப்போக்கன் குழந்தையை மூடியிருந்த துணிகளை எடுக்க, கிழவன் அவரைத் தடுத்தபடி என்ன செய்கிறாய் நீ என்று கேட்பர். துறவி அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்வார். "உனக்கென்ன ?" என்பார் வழிப்போக்கன்.

கிழவர், "அது பயங்கரம் ".

வழிப்போக்கன், "பயங்கரம் ?, யாரோ ஒருவர் இந்தத் துணியை எடுக்கப்போகின்றார், நான் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது." 

கிழவர்,"இது மிருகத்தனமானது "

வழிப்போக்கன், " மிருகத்தனமானது?, இந்தக் குழந்தையின் பெற்றோரைப் பாருங்கள். அவர்கள் சந்தோசமாக இருந்து விட்டு, இப்பொழுது போய் விட்டார்கள். அவர்கள் தான் மிருகத்தனமானவர்கள்."

கிழவர், "இல்லை, நீ தவறு. இந்தத் துணியைப் பார். இந்தக் குழந்தையைப் பாதுகாக்கவே அவர்கள் இந்தத் துணியை விட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசித்துப் பார், அவர்கள் எந்தமாதிரியான நிலவரத்தில் இந்தக் குழந்தையை விட்டுச் சென்றிருப்பார்கள்."

வழிப்போக்கன், "எல்லோருடைய உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள எனக்கு நேரமில்லை."

கிழவர், " நீ சுயநலவாதி"

வழிப்போக்கன்," அதில் என்ன தவறிருக்கிறது?, நீங்கள் சுயநலவாதியாக இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ முடியாது"

 கிழவர், "எல்லோருமே சுயநலவாதிகள் நேர்மையற்றவர்கள், தமக்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்பவர்கள், அந்த திருடன், பெண், ஆண், நீ " என்று கோபத்தில் அந்த வழிப்போக்கனுடன் சண்டை பிடிப்பார். அப்பொழுது," அத்துடன் நீயுமில்லையா. இது வேடிக்கையாக இருக்கிறது. நீ தான் நீதிமன்றத்தை ஏமாற்றினாய். நான் இல்லை.' என்றபடி வழிப்போக்கன் கதைப்பான். இறுதியில் அந்த குற்றச் சம்பவ நேரம் தொலைத்து போன முத்துப்பதித்த கத்தியை நீ தான் எடுத்திருக்க வேண்டும். அதை யார் திருடினார் என்று வழிப்போக்கன் கேட்டு சிரிப்பார்.   சிரித்துவிட்டு, அப்படியென்றால் நான் செய்வது சரி என்று சொல்லிவிட்டு, "ஒரு திருடன் இன்னொருவரனைத் திருடன் என்கிறான். சுயநலவாதியா!" என்று சொல்லிவிட்டு கிழவனை அடித்துவிட்டு சென்றுவிடுவான். 

துறவி விம்மியபடி இதனைப் பார்த்துக்கொண்டிருப்பார். மழையில் நனைந்தபடி வழிப்போக்கன் பெருத்த சிரிப்புடன் செல்வார். 

மழை ஓயும் வரை கிழவரும் துறவியும் பேசிக்கொள்ளவில்லை. அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். குழந்தை அழ ஆரம்பித்ததும் துறவி கொஞ்சம் நடக்க குழந்தையை வாங்குவது போல் கிழவர் தொட ஆரம்பிக்க," என்ன செய்கிறாய் நீ " என்றபடி குழந்தையை அவரிடம் கொடுக்காமல் விலத்துவார். அதில் ஒரு கொடியவனிடமிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் வேகம், ஒரு தடவை கூட அவர் அந்தக் குழந்தையை தொட்டுவிடக் கூடாதென்ற தவிப்பும் இருக்கும், ஆனால் " எனக்கு ஆறு குழந்தைகள். இன்னொரு குழந்தை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை." கண்களில் நீர் தளும்பியபடி உருக்கமான முகபாவத்துடன் கிழவர் நிற்பார். " நான் அப்படிச் சொன்னதற்காக வெட்கப்படுகிறேன்" என்று துறவி சொல்லும்பொழுது "இது தவிர்க்க முடியாதது, இந்த நாட்களில் ஒருவரையொருவர் நம்புவது கடினம், நான் தான் வெட்கப்பட வேண்டியவன். நான் என்னுடைய சொந்த ஆன்மாவை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன் " என்று தலையைக் குனிவார் கிழவர். அதற்கு, தாங்க முடியாத பாவத்துடன், "இல்லை, நான் உங்களை மதிக்கிறேன். உங்களுக்கு நன்றி. நான் மனிதர்கள் மேல் வைத்திருக்கும்  நம்பிக்கையை தொடர முடியும் என்று நினைக்கிறேன்" என்று சொல்லியபடி துறவி அந்தக் குழந்தையை கிழவரிடம் கொடுப்பார்.   




ஞான் கதையிலும் ராஷ்மோன் கதையிலும் ஏதோ ஒரு அக இணைப்பு நிகழ்கிறது அது மானுட  மனத்தின் இரண்டு பக்கங்களை விவாதிக்கிறது. இதனாலேயே ஒன்றை ஒன்று நிரப்பும் படங்களாக ஏதொவொருவகையில் மனத்தின் ஆழமான பகுதிகளை விவாதிப்பதாக அமைந்து விடுகிறது.  

அறம் தான் இரண்டின் மையமும். நாம் தேர்ந்தெடுக்கும் அறம் என்பது என்ன? நாம் நம்பும் அறத்திற்கு நாம் எவ்வளவு தூரம் நேர்மையாக இருக்கிறோம். ராஷ்மோனில் வரும் துறவியாக எங்களை கற்பனை செய்துகொண்டிருப்போம். ஆனால் தனது சொந்த ஆன்மாவை புரிந்துகொள்ள முடியாத கிழவனாகவே எஞ்சுகிறோம். ஆகவே இந்த அகச்சிக்கல்கள் சம காலத்தை பொறுத்தவரையில் முக்கியமானவையே. இந்தக் காலத்தில் யாரை நம்ப முடியும், நான் ஏன் சுயநலவாதியாக இருக்கக் கூடாது என்ற ஐம்பதுகளின் குரலும், நீ இன்னொன்றின் தொடர்ச்சி. தொடர்ச்சி மட்டும் தான் என்ற அதற்குப் பின்னரான ஞானின் குரலும் இன்னும் செவிப்பறைகளை மோதிப்பிளந்து உள் நுழையும் வசனங்கள் தான். இரண்டு படமும் இயங்கும் காலகட்டம் ஒன்று தான். ஆனால் அந்தக் குரல்களை சினிமா வெளிப்படுத்தும் காலங்கள் வேறு. அதற்கான தேவையின் அவசியமாகத் தான் இந்தக் காலத்திலும் ஒரு ஞான் தேவைப்படுகிறது. 


குழந்தை ஒரு மகத்தான படிமம். மனித குலத்தின் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை தொடர முடியும் என்பதை இன்னொருவருக்கு கையளிக்கும் துறவியின் படிமம் அது. குழந்தை மானுட குலத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. சக மனிதனே நரகம் என்ற இருத்தலியத்தின் குரல் எங்கு திரும்படினும் மோதும் போதும், குழந்தைகள் மனிதர்கள் இல்லை என்பது போன்ற ஒரு பாவனை நமக்குத் தேவையாக இருக்கிறது. ஒட்டுமொத்த நம்பிக்கையையுமே குழந்தைகளிடம்  கொடுக்கவேண்டியிருக்கிறது, ஏனென்றால் அது மனிதரல்ல. குழந்தை. அப்பழுக்கற்றது. ஆக ஏதோ ஒன்றை அதன் காலத்தில் மாற்றி விடலாம். இந்த அகச் சிக்கல்களைக் கடந்த மானுட அறம் ஒன்றை உருவாக்கி விடலாம் எனும் மாபெரும் இலட்சியவாதத்தின் படிமம் தான் குழந்தை.   

அந்தக் குழந்தைகளின் காலத்திற்கான எளிமையான கேள்வி தான் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பது, "வாழ்க்கைக்கான ஏதோ ஒரு நியாயத்தையா அல்லது
 நியாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையையா?".

கிரிஷாந்

நன்றி - கரவொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக