செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?





இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது.

அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் கூட அதே ஓர்மம். ஒரே கனவு.

இந்தளவு நீளமான பெண்கள் தலைமை தாங்கி நடத்துமொரு போராட்டம் நமது சமீப வரலாற்றுக்கு   மிகவும் புதிது.  அதனாலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அது ஒட்டு மொத்த தமிழ்ச் சூழலில் உள்ள பெண்களுக்கும் சக்தியளிப்பதாய் இருக்கும். இந்தப் பெண்கள் அடையப் போகும் வெற்றி என்பது தனியே காணி பெறுதல் மட்டுமல்ல. உரிமை பெறுதல் மட்டுமல்ல. அது பெண்களின் குரலையும் உறுதியையும் மறுபடியுமொருமுறை இந்த சமூகத்தில் நிலை நாட்டும் வெற்றி.



அடுத்து பதினைந்து நாட்களாக அந்தச் சிறுவர்களுக்குள் உருவாகும் போராட்ட குணம். நான் கதைத்த எந்தச் சிறுவனதோ சிறுமியினதோ வாயிலிருந்தும் தோல்வியென்ற சொல்லை கேட்கமுடியவில்லை. வெற்றி அடைவோம். அதற்குத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று சொன்னார்கள். மற்றவர்களுக்காகப் போராடும் அளவுக்கு அவர்களின் இத்தனை நாள் போராட்ட அனுபவம் அவர்களைக் கனியவைத்திருக்கிறது. எங்களுக்காக வந்தவர்களுக்காக  நாங்களும் போராடுவோம் என்று அனைத்துச் சிறுவர்களும் ஒருவர் மிச்சமில்லாமல் சொல்வார்கள்.

ஆகவே இவர்கள் அடையப் போகிற என்பது  வெற்றி அடுத்த தலைமுறைக்கு மிக முக்கியமான   செய்தியொன்றைச் சொல்லப் போகிறது. ஒரு பெரும் அனுபவம் வாய்ந்த கற்றுக் கொள்ளக் கூடிய போராட்டத்தைச் சொல்லித் தரப் போகின்றது.
இந்த வெற்றி எதிர்காலத்தில் உருவாக்கப் போகும் ஜனநாயகம் மிக்க தலைமுறையின் தொடக்கம்.



மேலும் இவர்கள் அடையப் போகும் வெற்றி எதிர்காலத்தில் பெருமளவிலான ஜனநாயக வழிப் போராட்டங்களின் ஆரம்பமாகவிருக்கப் போகிறது. அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அரசை மிகவும் அச்சுறுத்துகின்ற செய்தி. சோர்ந்து கிடக்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சம். இந்த மக்கள் நமக்கொரு கைவிளக்கைத் தரப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

இன்று பெருமளவிலான இளைஞர்களையும் பல்வேறு தரப்பினரையும் மக்களை நோக்கி சமீப காலப் போராட்டங்கள் இழுத்திருக்கிறது. பலரும் தெருவுக்கு இறங்கியிருக்கிறார்கள். கைகளில் பதாகைகளைப் பிடித்து அச்சம் தவிர்த்து ஒன்று திரண்டிருக்கிறார்கள்,இந்த மக்கள் அடையப் போகும் வெற்றி இவர்களுக்கு இந்த மக்களின் வெற்றியில் தமக்குமொரு பங்கிருப்பதான உணர்வைத் தோற்றுவிக்கும். அது ஏனைய பிரச்சினைகளுக்குமாக அவர்களை தெருவிலிறங்கத் தூண்டும். நம்பிக்கையை அளிக்கும்.

மேலும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் ஒப்பீட்டளவில் கடந்த காலத்திருந்ததைத் தவிர்த்து புதியதொரு அரசியல் கலாசாரம் தோன்றும். மக்களின் அரசியல் அல்லது மக்களின் சக்தி என்னவென்பதை தமிழ் அரசியல் வாதிகளும் சிங்கள அரசும் பார்க்கப் போகிறது. தமிழ் மக்களின் ஏழு வருட ஏமாற்றங்களுக்கு பதில் சொல்லப் போகும் காலம் வரப் போகிறது. ஏனென்றால் இந்த வகையான போராட் டங்களின் போதே ஜனநாயக சக்திகளும் முற்போக்கு சக்திகளும் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கும் ஒரு மீள் நிகழ் காலம் ஆரம்பிக்கும், அது தொடர்ச்சியான சிவில் சமூக வெளியை ஆரோக்கியமானதாக மாற்றும் பல்வேறு அறிமுகங்களும் எதிர்கால நோக்குகளும் இங்கே பரிமாறப் படும்.இது  சக்தி வாய்ந்த அழுத்தக் குழுக்கள் வலையமைப்பாக உருவாகும் தளமாகவும் இயங்கும். அது அடக்குமுறைக்குள்ளாகும் இனமொன்று என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதொன்று. சிங்கள சிவில் அமைப்புகளும் பல்வேறு பிற அமைப்புக்களும் இந்த போராட்டம் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு.


இந்தக் கட்டுரையின் தொனியைப் பார்க்க எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. எந்த இடத்திலும் தோல்வியடைவதற்கான வாய்ப்பை நான் பார்க்கவில்லை. உறுதியும் நம்பிக்கையும் கொப்பளிக்கிறது. எதிர்காலம் என்னவென்பதை எவை தீர்மானிக்கிறதென்பதை என்னால் உணர முடிகிறது. நேற்று இரவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டப் பந்தலின் முன் நானும் நண்பர்களும் உரையாடிய விடயம் ஒன்று தான் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இந்தக் கருத்தை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.அது " இந்த மக்களின் வெற்றியென்பது எதிர்காலத்திற்கான விதை பல போராட்டங்களுக்கான தொடக்கம்."

எனக்கு உறுதியையும் நம்பிக்கையையும் கற்றுத் தந்த பிலவுக் குடியிருப்பின் பெண்களுக்காகவும் சிறுவர்களுக்காகவும் நான் கடைசி வரை உடனிருப்பேன். தனிப்பட்ட வகையில் அதற்காகவும் இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.

அவர்கள் காணிக்குச் சென்று கால் வைத்துச் சிரிக்கும் போது அவர்களின் குழந்தைகளை நாம் தூக்கிக் கொள்ள வேண்டும்.

கிரிஷாந்-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக